இலங்கையில் முதன்முறையாக இந்தியத் தமிழ் திரைப்படத்தின் இசை வெளியீடு!

கொழும்பு போர்ட் சிட்டியில் ஆகஸ்ட் 22ஆம் தேதி “நல்லபடம்” இசை வெளியீடு
இந்தியத் தமிழ் திரைப்படமான “நல்லபடம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொழும்பு போர்ட் சிட்டியில் நடைபெறவுள்ள “வேர்ல்ட் ஆஃப் ராவண்” இசைத் திருவிழாவின் பிரமாண்ட மேடையில் நடைபெறவுள்ளது.
இந்தியத் தமிழ் திரைப்படங்களின் இசை வெளியீட்டு நிகழ்வுகள் தமிழகத்திற்கு வெளியேயும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியத் தமிழ் திரைப்படம் ஒன்றின் இசை வெளியீட்டு விழா இலங்கையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.
ஹரிஷ் சினிமாஸ் சார்பில் ஏ. அழகு பாண்டியன் தயாரிப்பில் உருவாகியுள்ள “நல்லபடம்” திரைப்படத்தில் டாக்டர் ஏ. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சி. பிரபுராம் “நல்லபடம்” திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். பிரபல இலங்கை கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருமான, ‘அய்யோ சாமி’ பாடல் மூலம் பரவலாக அறியப்பட்ட பொத்துவில் அஸ்மின் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
நான்கு பாடல்கள் – முன்னணி பாடகர்கள்.
“நல்லபடம்” திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாடல்களுக்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார்.
பாடல்களை வேல்முருகன், அருள்பிரகாஷம், புண்ணியா செல்வா, காயத்ரி ராஜீவ் மற்றும் சஷாங் ஆகியோர் பாடியுள்ளனர்.
மதுவை மையப்படுத்திய சமூகக் கருப்பொருளை நகைச்சுவை, காதல், உணர்வு மற்றும் சமூகச் செய்தி ஆகிய அம்சங்களுடன் இணைத்து “நல்லபடம்” திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இசை வெளியீட்டுக்கு திரையுலக வாழ்த்துகள்
“நல்லபடம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டை முன்னிட்டு இந்தியத் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த இசை வெளியீட்டு விழா, இந்தியத் தமிழ் சினிமாவுக்கும் இலங்கைத் தமிழ் ரசிகர்களுக்கும் இடையிலான கலைத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மண்ணில் “நல்லபடம்” திரைப்படத்தின் இசை பிரமாண்டமாக அறிமுகமாகும் இந்த நிகழ்வு, இந்தியா–இலங்கை தமிழ் கலை உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.



