News

எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களின் ஆதரவைத் திரட்டும் நடவடிக்கைகளை நாம் தீவிரப்படுத்துவோம்

அரசியலமைப்பின் 22 ஆவது சட்டத் திருத்தம் தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனம் குறித்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றங்களின் பரிசீலனையில் இருக்கும் விடயங்கள் குறித்து அரசாங்கப் பிரதிநிதிகள் பகிரங்கக் கருத்துக்களை வெளியிடுவது, நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் எனக் குறிப்பிட்டார்.

நீதிமன்றத் தீர்ப்புகளை முன்கூட்டியே ஊகிப்பது போல் கருத்துக்களைத் தெரிவிப்பது, நீதித்துறையின் நடுநிலைமை குறித்து சந்தேகங்களை எழுப்பும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் செல்வாக்கின்றி நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைச் சமீபத்திய விவாதங்கள் தெளிவுபடுத்தியுள்ளன என்று நாமல் தெரிவித்தார்.

அத்துடன், அண்மைய காலப் புலனாய்வு விசாரணைகள் சில குறிப்பிட்ட நபர்களை இலக்கு வைத்து நடத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

இதேவேளை அது தொடர்பான அறிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்து விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களின் ஆதரவைத் திரட்டும் நடவடிக்கைகளை கட்சி தீவிரப்படுத்தும் என்றார்.

“கொழும்பு 7 இல் உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் இருந்த ஜனாதிபதியை, பிரதான வீதிக்குக் கொண்டுவந்து மக்களுடன் நெருங்கச் செய்வதற்கு எம்மால் முடிந்தது” என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கான உரம் மற்றும் நெல் கொள்முதல், கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியம், பட்டதாரிகளுக்கான ஆதரவு மற்றும் பின்னடைவைச் சந்தித்துள்ள கைத்தொழில்களுக்கான உதவிகள் போன்ற மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button