மண்சரிவு அபாயம் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்கவும்

மண்சரிவு அபாயம் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மண் சரிவு தொடர்பான முன் எச்சரிக்கை அறிவிப்பொன்றை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மண் சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், நிலம் தாழிறங்குதல் மற்றும் மண் மேடுகள் சரிந்து விழுதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
எனவே, அபாயகரமான பகுதிகளின் ஊடாக பயணிப்பவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், தேவையேற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்குமாறும், ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர செயற்பாட்டு மையம், 117 அவசர அழைப்பு மையம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவுகள் பொதுமக்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் செயற்பட்டு வருகின்றன.
கட்டம் 2 இன் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள்:
காலி மாவட்டம்: நாகொட, நெளுவ
கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை, கங்க இஹள கோரளை
கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, தெரணியகல
மாத்தறை மாவட்டம்: பிடபெத்தற
நுவரெலியா மாவட்டம்: கொத்மலை, கொத்மலை கிழக்கு
இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை,
எஹெலியகொட
களுத்துறை மாவட்டம்: பாலின்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை, புலத்சிங்கள
கட்டம் 1 இன் கீழ் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள்:
கொழும்பு மாவட்டம்: சீதாவக்க
களுத்துறை மாவட்டம்: இங்கிரிய
கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய
மாத்தறை மாவட்டம்: கொடபொல, அக்குரஸ்ஸ
இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவானை
காலி மாவட்டம்: தவலம
இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) முற்பகல் 10.00 மணி முதல் நாளை முற்பகல் 10.00 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



