பாண், கொத்து, சோறு, போத்தல் தண்ணீர், வெங்காயம் உள்ளிட்ட பல அத்தியவசிய பொருட்களுக்கு விரைவில் கொன்ட்ரோல் பிரைஸ் நிர்ணயிக்கப்படும் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

பல அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்படும் என வர்த்தகம், வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (16) தெரிவித்தார்.
இந்த நாட்டில் நுகர்வோர் பாரியளவில் சுரண்டப்படுவதாகவும், அதனை தடுக்க நுகர்வோர் விவகார அதிகார சபை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது பல பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் அதிகாரசபையின் நுகர்வோர் சபை செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, கூடிய விரைவில் விலை மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
தற்போது 100 ரூபாவிற்கு விற்கப்படும் தண்ணீர் போத்தலை 40 ரூபாவிற்கும், 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் உப்பை 52 ரூபாய்க்கு விற்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
குடிநீர் போத்தல் , உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, பாண் உள்ளிட்ட
பேக்கரி பொருட்கள் அத்துடன் பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, போன்ற இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் சோறு, கொத்து உள்ளிட்ட உணவகப் பொருட்கள் என்பன அதிகபட்ச சில்லறை விலைக்கு உட்பட்டு பரிந்துரைக்கப்படும் பொருட்களில் உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

