News

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறுபான்மைச் சமூகத்தவர்கள் எவரும் உள்வாங்கப்படாமை அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது

(எஸ்.அஷ்ரப்கான்)

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்காவின் தலைமையில்  21 பேருடன் மட்டுப்படுத்தப்பட்டு அமைக்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறுபான்மைச் சமூகத்தவர்கள் எவரும் உள்வாங்கப்படாமை அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என கல்முனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் பளில்  பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான தேச கீர்த்தி ஏ.அப்துல் கபூர் தெரிவித்தார்.

அண்மையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அமைச்சரவை தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் 21 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுமார் 10 இலட்சம் முஸ்லிங்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் அமைச்சரவை நியமனத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் நியமிக்கப்படாமை கவலையளிக்கின்றது.
இலங்கையை ஆட்சி செய்த பேரரசர் மகா பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சி கால அமைச்சரவையில் இருந்த 16 அமைச்சர்களில் 04 பேர்கள் முஸ்லிம் அமைச்சர்களாக பதவி வகித்ததுடன் அதனைத் தொடர்ந்து வந்த சிங்கள அரசர்கள் ஆட்சியில் அவர்களது அமைச்சரவையிலும் முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
கடந்த காலங்களில் ஒன்பது மாகாணங்களையும் 25 மாவட்டங்களையும் மையமாக வைத்து முன்னாள் ஜனாதிபதிகள் அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்ததாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியான ஜே. ஆர்.ஜேவர்த்தன முதல் இறுதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க வரை உள்ள அரசாங்கத்தின் அமைச்சர் அவையில் முஸ்லிம்கள் அமைச்சர்களாக பதவி வைத்துள்ளார்கள்.
1977 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜேவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கே.டபிள்யு. தேவநாயகம், 1989 ஆம் ஆண்டில் ஆர். பிரமதாச ஜனாதிபதியாக இருந்த போது அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஏ. ஆர். மன்சூர், 1994 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது அம்பாறை மாவட்டத்தில் இருந்து எம்.எச்.எம். அஷ்ரப், 2000 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா ஜனாதிபதியாக இருந்தபோது அம்பாறை மாவட்டத்திலிருந்து திருமதி பேரிய அஷ்ரப், 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அம்பாறை மாவட்டத்தில் இருந்து திருமதி. பேரியல் அஷ்ரப் மற்றும் ஏ.எல். அதாவுல்லா, 2010 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அம்பாறை மாவட்டத்திலிருந்து ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர்கள் கிழக்கு மாகாணத்தில் இருந்து அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்து வந்த வரலாற்று உண்மைகளை யாராலும் மறக்க முடியாது.
2024 ஆம் ஆண்டில் தேசிய மக்கள் சக்தி கட்சி 159 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்காவினால் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்தவர்கள் இணைத்துக்கொள்ளப்படாதது அந்த மாகாணம் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது.
இது விடயத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்படக்கூடிய தகுதியானவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்கள் தெரிவு செய்யவில்லை என்று தேசிய மக்கள் சக்தி அரசு நியாயப்படுத்துகின்றதா ? வடக்குக்- கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் எழுந்த போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம். அதாவுல்லா அமைச்சரவையில் இருந்த காரணத்தினால் தான் வடக்கு – கிழக்கு இணைக்கப்படாது தனித்தனியாக  இருக்க முடிந்தது. அவர் அன்று அமைச்சரவை இல்லாது பாராளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்திருந்தால் அதைச் செய்திருக்க முடிந்திருக்காது.
அதேபோன்றுதான் கே.டப்ளியு. தேவநாயகம் அமைச்சரவையில் இருந்த காரணத்தினால் தான் கிழக்கு பல்கலைக்கழகத்தை கொண்டுவர முடிந்தது. ஏ.ஆர். மன்சூர் அமைச்சரவையில் இருந்த காரணத்தினால் தான் அட்டாளச்சேனையில் கல்விக் கல்லூரி, கல்முனையில் நீதிமன்ற கட்டிட தொகுதி,ஆவுஸ்திரேலியா அரசாங்கத்தின் உதவியுடன் குழாய் நீர் குடிநீர் திட்டம், பொதுச் சந்தை கட்டிடத் தொகுதி, செயலக கட்டிடத் தொகுதி,பொது நூலகம் போன்றவை கல்முனைக்கு கொண்டு வர முடிந்தது.
எம்.எச்.எம். அஷ்ரப் அமைச்சரவையில் இருந்த காரணத்தினால்தான் தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலிவில் துறைமுகம் போன்றவற்றை கொண்டுவர முடிந்தது.
திருமதி. பேரியல் அஷ்ரப் அமைச்சரவையில் இருந்த காரணத்தினால் தான் கல்முனை கரவாகு வடிச்சல் திட்டத்தை உலக வங்கி மூலம் அபிவிருத்தி அடையச் செய்ய முடிந்தது.
செல்லையா ராஜதுரை அமைச்சரவையில் இருந்த காரணத்தினால் தான் மட்டக்களப்பில் இசை நடனக் கல்லூரியை உருவாக்க முடிந்தது.
மாகாணம் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி அந்த அந்த மாகாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சரவையில் அங்கம் வகித்தால் மட்டும்தான் குறித்த மாகாணத்தின் பிரச்சினைகளையும் அபிவிருத்தித் திட்டங்களையும் உரிமையுடன் பேச முடியும் என்று முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.அப்துல் கபூர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button