மன்னிப்பு மட்டும் போதாது – ஜனாஸா எரிப்பால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அரசு இழப்பீடும் வழங்க வேண்டும் ; பாராளுமன்றில் சஜித் வலியுறுத்தல்
கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்த விடயத்தில் அரசு மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பியோ முயற்சிக்கக் கூடாது.ஜனாஸாக்கள் தகனம் செய்த விடயத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,
கொரோனா தொற்று காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகன கொள்கை என்ற தீர்மானத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் ஆதரவளித்தனர். இதன் மூலம் முஸ்லிம் மக்களின் சமய, கலாசார உரிமைகள் முற்றாக மீறப்பட்டன. நாட்டில் இனவாதமும் மதவாதமும் முன்னெடுக்கப்பட்டன .
முஸ்லிம்களை இலக்கு வைத்து அடக்கமா தகனமா என்ற விவகாரம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவின் அமைச்சரவை தவறான தீர்மானத்தை எடுத்தது. இந்த தீர்மானம் எந்த நபரின் அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது? இது தொடர்பாக ஆலோசனை வழங்கியது யார்? இந்த ஆலோசனை தொடர்பாக அரசியல் தலைமைகள் பரிசீலித்து ஆராய்ந்து பார்க்காததன் காரணம் என்ன? போன்ற விடயங்கள் தொடர்பான காரணங்களை அரசு முன்வைக்க வேண்டும்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை கைவிட்டு, முஸ்லிம் மக்களுக்கு எதிராக இவ்வாறான குற்றச் செயலைச் செய்ய தவறான தீர்மானங்களை எடுத்தவர்களைக் வெளிப்படுத்தி, தகனமா அடக்கமா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பியோட அரசு முயற்சிக்கக் கூடாது என்றார்.