ஹமாஸ் அமைப்பினருடன் அமெரிக்கா இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது

பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் அமெரிக்கா இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை மூன்று கட்டங்களாக நிரந்தரமாக நிறுத்த முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து முதல்கட்டமாக ஜனவரி 19ஆம் திகதி அமுலுக்கு வந்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலும், ஹமாஸும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கைதிகளை பரிமாறிக்கொண்டன. அடுத்தகட்ட போர் நிறுத்தம் ஏற்படுவதில் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இந்நிலையில், கெய்ரோவில் நடைபெற்ற அரபு நாடுகளின் மாநாட்டில் காஸா மக்களை அண்டை நாடுகளில் குடியேற்ற வேண்டும் என்ற ட்ரம்ப்பின் திட்டத்துக்கு மாற்றாக, புதிய அமைதி திட்டம் பரிந்துரைக்கப்பட்டது.
எனினும், இந்த திட்டத்தை அமெரிக்க அரசும், இஸ்ரேலும் தற்போது நிராகரித்துள்ளன. இதற்கிடையே ஹமாஸ் வசம் உள்ள அமெரிக்க பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸ்அமைப்பினருடன் அமெரிக்கா இரகசிய பேச்சுவர்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளை 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஹமாஸ் அமைப்புடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். தற்போது ஹமாஸ் பிடியில் 59 பணயக்கைதிகள் இருப்பதாகவும் இதில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் எனவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன


