இந்த அரசாங்கத்தில் எமக்கு தெரியாமல் அபிவிருத்தியொன்று வரப்போவது இல்லை. வருவதென்றால் நாம் அனுமதித்த அபிவிருத்தி வருமே ஒழிய அது யார் உயிரை கொடுத்தாலும் வர மாட்டாது. யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்; பிரதியமைச்சர் முனீர் முழப்பர்

இந்த பிரதேச சபை தேர்தல் அல்ல. இறைவன் நாடினால் அடுத்த பிரதேச சபை தேர்தல் இடம்பெறும் போதும் இருப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான். ஏனென்றால் பிரதேச சபையின் ஆயுட்காலம் நான்கு வருடங்கள். நாம் ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் தான். இன்னும் ஐம்பத்து ஐந்து மாதங்கள் இருக்கின்றன. எனவே தடுமாற்றம் அடைய தேவையில்லை என்று தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு பிரதியமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (27) தேசிய மக்கள் சக்தி சார்பில் அத்தனகல்ல பிரதேச சபைக்கு கஹட்டோவிட்ட வட்டாரத்திலிருந்து போட்டியிடும் வட்டார வேட்பாளர் இன்சாப் மற்றும் பட்டியல் வேட்பாளர் ஜவாத் ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
திஹாரியிலும் இங்கும் (கஹட்டோவிட்டவிலும்) சிலர் சொல்கிறார்களாம் ஊருக்கு வருபவற்றை முனீர் மௌலவி தடுக்கிறாராம் என்று. யாரோ தெரியாது போட்டுக்கொடுப்பது?
நானும் தோழர் ருவன் மாபாலகமவும் அத்தனகல்ல அபிவிருத்தி குழுவில் இருக்கிறோம். இந்த அரசாங்கத்தில் எமக்கு தெரியாமல் அபிவிருத்தியொன்று வரப்போவது இல்லை.
வருவதென்றால் நாம் அனுமதித்த அபிவிருத்தி வருமே ஒழிய அது யார் உயிரை கொடுத்தாலும் வர மாட்டாது. யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்.
சில நல்ல மனிதர்கள் கஹட்டோவிட்டவில் இருக்கிறார்கள். அவர்கள் தோல்வியடைந்தாலும் கஹட்டோவிட்டவுக்கு வேலை செய்வார்கள். நாம் வெற்றி பெற்றால் அரசாங்கத்தால் அபிவிருத்தி செய்வோம். சிலர் தோல்வியடைந்தாலும் அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வருவார்கள் என்றார்.
இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் தொழில் பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபாலகம மற்றும் கட்சி ஆதரவாளர்கள், பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
(ரிஹ்மி ஹக்கீம்)

