கலவரத்தில் தனது சொத்து சேதமடைந்ததாக கூறி இலட்சக்கணக்கில் நஷ்டயீடு பெற்ற சமல் ராஜபக்ச விரைவில் கைதாகும் நிலை ( உண்மையில் அந்த சொத்து அவருடையதே அல்ல என்பது மேலதிக தகவல்)

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ, 2022 மே 9 ஆம் தேதி நடந்த கலவரத்தில் தனது சொத்து சேதமடைந்ததாகக் கூறி அரசாங்கத்திடம் இருந்து ரூ. 15.2 மில்லியன் இழப்பீடு பெற்ற விவகாரத்தில், விரைவில் கைது செய்யப்படலாம் என அரசு நடத்தும் சிலுமின செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
திஸ்ஸமஹாராம, மாகம பகுதியில் உள்ள தனது வசிப்பிடம் மற்றும் சொத்து சேதமடைந்ததாகக் கூறி, சமல் ராஜபக்ஸ இந்த இழப்பீட்டை கோரியிருந்தார்.
ஆனால், விசாரணைகளில் அந்த சொத்து அவருக்கு சொந்தமானது இல்லை எனவும், அங்கு வசிப்பிட கட்டமைப்பு எதுவும் இல்லை எனவும், வெறுமனே ஒரு நெல் சேமிப்பு களஞ்சியம் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.
சொத்து தனது கட்டுப்பாட்டில் உள்ளதாக ராஜபக்ஸ சத்தியப்பிரமாணம் செய்து அளித்திருந்த போதிலும், மேற்கொண்ட விசாரணைகளில் அந்த நிலம் வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2023 ஜூலை மாதம் வெளியான மதிப்பீட்டு அறிக்கையில், அந்த இடத்தில் ரூ. 14.8 மில்லியன் மதிப்புள்ள வீடு இருப்பதாகவும், களஞ்சியத்துக்கு ரூ. 222,600 சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், பொது நிர்வாக அமைச்சு, தங்கள் அதிகார வரம்பில் இந்த இழப்பீடு வழங்கப்பட முடியாது என தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தது. இருப்பினும், முழு தொகையும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
-Madawala News
இந்த முறைகேடு தொடர்பாக, லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) சமல் ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும், இழப்பீட்டை அனுமதித்த அரசு அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் சிலுமின தெரிவிக்கிறது.

