அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் பங்களாதேஷ் 19% ஆகவும், இந்தியா 18% ஆகவும் வரி குறைப்பைப் பெற்றுள்ள நிலையில், இலங்கை 20% வரியுடன் காணப்படுவதாக சஜித் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமெரிக்காவிற்கான ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக உயர்ந்த வரி விகிதத்தை அரசாங்கம் பேணி வருவதாக விமர்சித்துள்ளதுடன், இது இலங்கையின் கைத்தொழிலை பாரிய பின்னடைவுக்கு உள்ளாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள பிரேமதாச, பங்களாதேஷ் 19% ஆகவும், இந்தியா 18% ஆகவும் வரி குறைப்பைப் பெற்றுள்ள நிலையில், இலங்கை 20% வரியுடன் ஆடைத் துறைக்கு எவ்வித சலுகைகளும் இன்றி காணப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.
“அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் 70% ஆடைகளாக இருக்கும் நிலையில், 20% வரி விகிதமானது இலங்கை தயாரிப்புகளை மற்ற மாற்றீடுகளை விட கணிசமான அளவில் போட்டித்தன்மை அற்றதாக மாற்றும்,” என்று அவர் கூறினார்.
பிராந்தியத்திலேயே மிக உயர்ந்த வரி விகிதத்தைக் கொண்டிருப்பதன் விளைவுகளையும், ஆடைத் துறைக்கு சலுகைகள் இல்லாமையையும் அரசாங்கம் உணராமல் இருப்பதாக பிரேமதாச குற்றம் சாட்டினார்.



