விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபரும் மாணவர்களின் பெற்றோர்களும் மோதிக்கொண்டதில் அதிபர் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி #இலங்கை

காலி பகுதியில் உள்ள முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் அதிபருக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் அதிபர் உட்பட மூவர் காயமடைந்து காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் முறையாக நடைபெறாமை, மாணவர்களுக்கான வசதிகள் குறைபாடு மற்றும் தற்போதைய கல்வி முறையை சீர்திருத்தக் கோரி பெற்றோர்கள் நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நிறைவடைந்த பின்னர் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அதிபருடன் பெற்றோர்கள் நடத்திய பேச்சுவார்த்தை முற்றியதில், அது கைகலப்பாக மாறியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிபர் மற்றும் ஏனைய இருவரின் நிலைமை பாரதூரமானதாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் குறித்து காலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



