“இலங்கை இப்போது திவாலான நாடு அல்ல!” – ஒரு காலத்தில் திவாலான நாடு தற்போது முறையாக அபிவிருத்தியடைந்து முன்னோக்கிச் செல்கிறது பிரதி அமைச்சர் அறிவிப்பு

உலகப் பொருளாதாரத் தரவுகளின்படி, இலங்கை 2025 ஆம் ஆண்டில் உயர் வளர்ச்சியை எட்டியுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
படல்கும்புர பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மாளிகாதென்ன சந்தியிலிருந்து 11 ஆம் கட்டை மடுகஹபிட்டிய வரையிலான வீதியை கார்பெட்டிட்டு அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
திவாலான நாடு தற்போது முறையாக அபிவிருத்தியடைந்து முன்னோக்கிச் செல்வதாகவும் அவர் கூறினார்.
“நாட்டை ஸ்திரப்படுத்தி, உலகப் பொருளாதார சவால்களையும் எதிர்கொண்டு, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறோம். பொருளாதார வளர்ச்சி வேகத்தின்படி அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம்.
அதேநேரம், கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் (வெள்ளம்/வறட்சி) எமது நாட்டிற்கு ஒரு இலட்சம் கோடிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டது. நாட்டின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்படவிருந்த பணம் அந்த இழப்புகளுக்காக செலவிட வேண்டியுள்ளது. ஏற்கனவே அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பெருமளவிலானோருக்கு நஷ்டஈடு வழங்கி, நாட்டை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகம் பற்றிய புரிதலுடனும், மோசடி ஊழல்கள் இன்றியும், பொதுப்பணத்தை வீணடிக்காமலும், தனிப்பட்ட வரப்பிரசாதங்களைக் குறைத்துக்கொண்டும் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதை நாட்டு மக்களுக்கு வழங்க அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.”
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் பணிகள் இன்று (14) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ், ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் மேலும் ஒரு வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
பதுளை – மொனராகலை பிரதான வீதி மற்றும் புஸ்ஸல்லாவ வீதிக்கு விரைவாகப் பிரவேசிக்கக்கூடிய இந்த 11 ஆம் கட்டை மடுகஹபிட்டிய வீதியின் அபிவிருத்திக்காக 600 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில் வழங்குநரின் கீழ், போட்டித்தன்மையுடனான வெளிப்படையான கொள்முதல் நடைமுறையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களினால் இந்த வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.



