இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் தளத்தின் மீது ஈரான் பலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தியது – இந்த இடம் ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

ஈரான் தனது இரண்டு இடைநிலைத் தொலைவு ஏவுகணைகளை இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரித்தானிய கூட்டு இராணுவத் தளமான டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஏவித் தாக்கியதாக தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, ஏவுகணைகள் எவையும் தளத்தைத் தாக்கவில்லை; ஒன்று நடுவானில் செயலிழந்தது, மற்றொன்றை அமெரிக்கப் போர்க்கப்பல் SM-3 ஏவுகணை மூலம் இடைமறிக்க முயன்றது. இந்த இடைமறிப்பு முயற்சி வெற்றியடைந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்த இதழ் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் முயற்சி குறித்து ஈரான் அல்லது அமெரிக்க அதிகாரிகளால் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
ஈரானின் தாக்குதல் திறன் குறித்து இந்த முயற்சி முக்கியத் தகவல்களை வெளிப்படுத்துகிறது.
டியாகோ கார்சியா ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் (2,484 மைல்கள்) தொலைவில் உள்ளது. இது அந்நாட்டின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அரக்சி கடந்த மாதம் ஈரான் தனது ஏவுகணை எல்லைக்குத் தானாகவே விதித்துக் கொண்டதாகக் கூறிய 2,000 கிலோமீட்டர் வரம்பைப் போல இருமடங்காகும்.
மத்திய இந்தியப் பெருங்கடலில் உள்ள சாகோஸ் தீவுக்கூட்டத்தின் மிகப்பெரிய தீவான இது, 1970-களிலிருந்து அமெரிக்க-பிரித்தானிய கூட்டு இராணுவத் தளமாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் இது நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் பிற மூலோபாய சொத்துக்களுக்கான தளமாகவும் உள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் பிப்ரவரி 28 அன்று தொடங்கின. இதில் அப்போதைய உச்ச தலைவர் அலி காமேனி உட்பட 1,300 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல், ஜோர்டான், ஈராக் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகளை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.



