News

தவறான முடிவுகளின் விளைவுகளை 220 இலட்சம் மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர் – மூன்றாவது பாதையை தோற்றுவித்து ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவோம் : சஜித்

தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களில் திசைதெரியாமல் தவறான முடிவுகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில், அந்தத் தவறான முடிவுகளின் விளைவுகளை 220 இலட்சம் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், வலதுசாரி அல்லது இடதுசாரி என்று என கருதாமல் பொது மக்கள் முகாமை வலுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றன.

இதில் காமினி திசாநாயக்க எதிர்பார்த்தது போல் நாட்டின் வயல்வெளிகளை செழுமைப்படுத்தி உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காணியற்ற மக்களுக்கு காணிகளை வழங்கி வலுப்படுத்தும் பொது மக்கள் முகாமை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான காலமே இதுவாகும். அத்தகைய ஒன்றிணைவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து அடித்தளம் இடுமென குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (20) மாலை இடம்பெற்ற இந்நாட்டின் அரசியல் ஆளுமைகளில் ஒருவராக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் 84 ஆவது ஜனன தின நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சமூகம் இப்போது கட்சி தாவும் அரசியலையும், டொலர் கட்டுகளுக்கு நிலைமாறும் அரசியலையும் ஏற்றுக்கொள்வதில்லை. அத்தகைய கூட்டணிக்கும் ஒன்றிணைவுகளுக்கும் மக்கள் தயாராக இல்லை. மக்களின் ஆணையால் பெற்ற வெற்றியில் இறுதியில் வெற்றி பெற வேண்டியது பொது மக்களே ஆகும். மக்கள் நம்பிக்கையை, பொது மக்களின் உரிமைகளை காசுக்கு விற்ற காலம் முடிந்து விட்டது.

நடுத்தர பாதை, பொது மக்கள் பாதை, மூன்றாவது பாதையை தோற்று விக்க சீரழிந்த முதலாளித்துவத்தையும், தீவிர தாராளவாத கோட்பாடுகளையும் புறக்கணித்து, தீவிர கம்யூனிசவாதம் மற்றும் சமூகவாதத்தையும் புறக்கணித்து, மனிதநேய முதலாளித்துவம் மற்றும் சமூக நீதியை நோக்கி, ஐக்கியத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் பேணி, சம்புத்த சாசனத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கி அதனைப் பாதுகாத்து, ஏனைய மதங்கள் மற்றும் இனங்களை வலுப்படுத்தி, ஒன்றிணைந்து, சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் செயல்படும் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

காமினி திசாநாயக்கவே எனது அரசியல் பயணத்தின் ஆரம்ப கர்த்தா.

என்னுடைய அரசியலுக்கு ஆரம்பத்தை வழங்கியவர்கள் பற்றி பலரும் பல விளக்கங்கள் கூறினாலும், குடும்ப அரசியலை புறக்கணித்தவராக ரணசிங்க பிரேமதாசவின் மறைவிற்குப் பின்னர் நான் அரசியலில் நுழைந்தேன். என்னுடைய அரசியல் மற்றும் சமூக சேவை பயணத்திற்கு காமினி திசாநாயக்க அவர்கள் தான் ஆரம்பத்தைப் பெற்றுத் தந்தார். ஹம்பந்தோட்டை மாவட்ட அமைப்பாளர் பதவியையையும் அவர் தான் பெற்றுத் தந்தார்.

மக்கள் தரப்பிலிருந்தே காமினி திசாநாயக்க செயற்பட்டார்.

வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் பொது மக்களின் தலைவராக திகழ்ந்த காமினி திசாநாயக்க அவர்கள், 30 ஆண்டுகளில் நிறைவு செய்ய வேண்டிய மகாவலி திட்டத்தை ஆறு வருடங்களில் முடிக்கும் சவாலை ஏற்று அதனை வெற்றிகரமாக நிறைவேற்றினார். ஸ்வர்ணபூமி ஒப்பு திட்டத்தை உருவாக்கியதும் அவர்தான்.

இடதுசாரி வலதுசாரி இரண்டுமே இப்போது தோல்வி கண்டு விட்டன.

இடதுசாரியும் வலதுசாரியும் இரண்டுமே தோல்வி கண்டு விட்டன என்பது தான் தற்போதைய கள யதார்த்தமாகும். இந்த இடதுசாரி மற்றும் வலதுசாரி கோட்பாடுகள் வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்கு தறிவிக்கப்பட்ட அன்னியக் கோட்பாடுகள் ஆகும். மக்களாட்சிய கோட்பாடே இன்று நமது நாட்டிற்கு தேவையான ஒன்றாக அமைந்து காணப்படுகின்றன. பொது மக்களை பாதுகாத்து, பொது மக்களின் நலனுக்காக செயல்படும் கோட்பாடே தற்சமயம் அவசியாக காணப்படுகின்றது.

உலகமும் தற்போது மக்களாட்சியையே ஏற்றுக்கொள்கிறது.

இடதுசாரியும் வலதுசாரியும் காலாவதியான கொள்கை நிலைப்பாடுகளாகும். உலகம் நிராகரித்த கோட்பாடுகள் ஆகும். மக்களை அடிப்படையாகக் கொண்ட மக்களாட்சிய கோட்பாடுகளையே உலகம் ஏற்றுக்கொண்டு வருகின்றது. ஜே.ஆர். ஜயவர்தன, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி மற்றும் ரணசிங்க பிரேமதாச உள்ளிட்டோர் எந்த கோட்பாட்டு தரப்பிலும் தங்களை சேர்த்துக் கொள்ளவில்லை. யார் என்ன கருத்தைச் சொன்னாலும் மக்களாட்சிய கோட்பாடுகளையே இந்த தலைவர்கள் பின்பற்றினர்.

மகாவலி, மகபொல, கம்உதாவ மற்றும் ஜனசவிய வேலைத்திட்டங்கள் என்பன வலதுசாரி கோட்பாடுகள் அல்ல, இவை பொது மக்களை வலுப்படுத்தும் மக்களாட்சிய கோட்பாடுகள் ஆகும். காமினி திசாநாயக்க அவர்கள் லும்பன் முதலாளித்துவம், நட்புவட்டார முதலாளித்துவம், இடதுசாரி சமூகவாத கொள்கைகளை நிராகரித்த ஒருவராவார். மகாவலி மற்றும் ஸ்வர்ணபூமி ஒப்பு வழங்கும் திட்டங்கள் மூலம் பொது மக்களின் கனவுகளை நனவாக்கும் மக்களாட்சிய கோட்பாட்டையே முன்னெடுத்தனர்.

நமது நாட்டிற்கு டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை பெற்று தரும் மகத்தான இராஜதந்திர பணியை காமினி திஸாநாயக்க அவர்களே ஆற்றினார். மகாவலி வேலைத்திட்டத்திற்கு மிகப்பெரிய நிதி பலம் கிடைத்த சந்தர்ப்பத்தில் விக்டோரியா திட்டத்திற்கு பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் வைத்து மார்கரெட் தாட்சரிடம் விக்டோரியா திட்டத்தைக் கோரும் ஆவணத்தை ரணசிங்க பிரேமதாச வழங்கி வைத்தார்.

பின்னாளில் பல்வேறு காரணங்களால் கருத்து வேறுபாடுகளால் விரிசல் ஏற்பட்டாலும், இறுதி தருணத்தில் கூட ரணசிங்க பிரேமதாச காமினி திசாநாயக்காவுடன் இணைவதையே விரும்பினார். இவர்கள் இருவரும் ஒரே பாதையிலேயே பயணித்தனர். அது பொது மக்களின் பாதையாகும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button