ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்கவும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாய் வரை மானியம் வழங்கவும் தீர்மானித்துள்ளோம் – அஸ்வெசும கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்படும் ; பாராளுமன்றில் ஜனாதிபதி

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது பாராளுமன்ற அவைக்கு வருகை தந்துள்ளார்.
தற்போதைய உலகப் போர்ச் சூழலினால் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
இதன்போது எரிபொருள் மற்றும் வலுசக்தி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எரிபொருள் செலவினங்களுக்கு ஏற்ப விலைகளைத் திருத்தியமைக்கும் போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.
சந்தைப் பெறுமதிக்கு இணங்க, தற்போது ஒரு லீற்றர் டீசலின் விலை 600 ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
“எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கடுத்த அண்மைய தினமொன்றில் எரிபொருளுக்கான புதிய செலவு அடிப்படையிலான விலைக் சூத்திரத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். அந்தச் செலவு முந்தைய மாதத்தின் உண்மையான தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும். அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது, உண்மையான செலவைக் கணக்கிட்டு, ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்கவும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாய் வரை மானியம் வழங்கவும் தீர்மானித்துள்ளோம். இதன்படி கணக்கிடும் போது, ஒரு மாதத்திற்கு 20 பில்லியன் ரூபாய், அதாவது 2,000 கோடி ரூபாய் செலவாகும். மூன்று மாதங்களுக்கான இந்த முன்மொழிவை நாங்கள் தயாரித்துள்ளோம். இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கே இந்த மானியங்களை நாம் வழங்க வேண்டும்.” என்றார்.
மேலும் குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயணாளர்கான 17,500 கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.
குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
– கடும் வறுமைப் பிரிவில் உள்ள ஒரு குடும்பத்திற்கு ரூ. 7,500/- வழங்குதல்.
– ஏழ்மையான பிரிவில் உள்ள ஒரு குடும்பத்திற்கு ரூ. 5,000/- வழங்குதல்.
– இடைநிலைக் குடும்பத்திற்கு ரூ. 2,500/- வழங்குதல்.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, மின்சார உற்பத்திக்காக அனல் மின் நிலையங்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்படும் மேலதிகச் செலவை மின் நுகர்வோர் மீது சுமத்துவதற்குப் பதிலாக, 90 அலகுகளுக்கும் (Units) குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், குறித்த மேலதிகச் செலவை 03 மாத காலத்திற்கு அரசாங்கமே ஏற்றுக்கொள்வது.
உர மானியம்
ஒரு ஹெக்டேயருக்கு 25,000/- ரூபாவாக வழங்கப்பட்ட உர மானியத்தை, யால பருவ செய்கைக்காக 30,000/- ரூபா வரை அதிகரித்தல்.
மேலதிக பயிர்களுக்காக ஒரு ஹெக்டேயருக்கு 15,000/- ரூபாவாக வழங்கப்பட்ட உர மானியத்தை, யால பருவ செய்கைக்காக 18,000/- ரூபா வரை அதிகரித்தல்.
விவசாயிகளுக்கு, விவசாய சேவை மையங்கள் ஊடாக யால பருவ செய்கைக்காக 50 கிலோகிராம் யூரியா உர மூட்டை ஒன்றினை 10,200/- ரூபா நிலையான விலையில் வழங்குதல்.
மீனவர் மானியம்
ஒரு நாள் மீன்பிடிப் படகு ஒன்றிற்கு, ஒரு நாளைக்கு 25 லீற்றர் வீதம் மாதமொன்றுக்கு அதிகபட்சமாக 25 நாட்களுக்கு, ஒரு லீற்றர் எரிபொருளுக்காக 50 ரூபா என்ற அடிப்படையில் 3 மாத காலத்திற்கு மானியம் வழங்குதல்.
எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்குள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்றிற்கு 150,000/- ரூபா வீதம் ஒரே தடவையில் கொடுப்பனவு வழங்குதல்.


