அரசுக்கு 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பொதுஜன பெரமுன வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

அரசுக்கு 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் தயா புஷ்பகுமார பட்டகே எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு மேலதிக நீதவான் லியன வீரசாவித்தனவினால் (08) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்படி, நான்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்புருகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளரான பட்டகே, அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் தமக்கு அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டதுடன், இதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரிக்கை விடுத்திருந்தது.


