ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் முன்னாள் CEO நேற்று மரணமான நிலையில், எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்க 12 ஆம் திகதி வருமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டது

எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்குவதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2026 மே 12 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ராஜபக்ஷவுக்கு அறிவிக்கும் கடிதம் இன்று (மே 09) அவரது கார்டன் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளதாக கடந்த வாரம் பல ஊடக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அதுவரை உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை என அறியமுடிகிறது.
ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன காலமான 24 மணித்தியாலங்களுக்குள் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



