எபோலா (Ebola) வைரஸ் பரவலுடன் தொடர்புடைய எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்வதற்கு இலங்கை தயார் என அறிவிப்பு

எபோலா (Ebola) வைரஸ் பரவலுடன் தொடர்புடைய எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை செய்துள்ளதாகப் பொதுச் சுகாதார நிபுணர் மருத்துவர் துஷானி தபரேரா தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எபோலா வைரஸ் பரவல் நிலைமை குறித்து இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். எபோலா வைரஸ் தொற்றினால் ஏற்படும் இறப்பு விகிதம் சுமார் 50 சதவீதமாகக் காணப்படுவதால், உலக சுகாதார அமைப்பும் (WHO) உலகளாவிய சுகாதார அதிகாரிகளும் இந்நோய் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மருத்துவர் தபரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் விளக்குகையில்:
“எபோலா வைரஸானது மனிதர்கள் மற்றும் கொரில்லாக்கள், சிம்பன்சிகள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளைப் பாதிக்கக்கூடியது. அத்துடன், தொற்றுக்குள்ளானவர்களின் இரத்தம் அல்லது பிற உடல் திரவங்களுடனான நேரடித் தொடர்புகளின் மூலமே இந்த வைரஸ் வேகமாகப் பரவுகிறது.”
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, சுகாதார அமைச்சு ஏற்கனவே இதற்கான ஆயத்தத் திட்டங்களைச் செயல்படுத்தி, உருவகப்படுத்துதல் பயிற்சிகளையும் (Simulation Exercises) நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ் ஆயத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, எபோலா பரவல் பதிவாகியுள்ள கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளைக் கண்காணிப்பதற்காக விசேட கண்காணிப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அமைச்சின் தனிமைப்படுத்தல் பிரிவு, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஊடாக வருகை தரும் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளைக் வெளிப்படுத்தும் நபர்கள் பற்றிய தகவல்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக உடனடியாகத் தொற்றுநோயியல் பிரிவுக்கு (Epidemiology Unit) அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நோயாளர்களை அனுமதித்துச் சிகிச்சையளிப்பதற்காக, அங்கொடை தேசிய தொற்றுநோய் அறிவியல் நிறுவனம் (IDH) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தேவையான சிகிச்சை முறைகளும் தொற்றுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் ஏற்கனவே அங்குப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் துஷானி தபரேரா மேலும் தெரிவித்துள்ளார்.



