“எங்கள் வேலையை நாங்கள் செய்துவிட்டோம்… இப்போது உங்கள் வேலை…”

இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தின் அளவை கள உதவியாளர் நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா
இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தின் அளவை கள உதவியாளர் (Survey Field Assistant) நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த அவர்களின் தலைமையில் நிலஅளவைத் திணைக்களத்தில் நடைபெற்றது.
பரீட்சைக்குத் தோற்றிய 570 பேரில் 71 பேருக்கு அளவை கள உதவியாளர் பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் இங்கு வழங்கி வைக்கப்பட்டன. நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், நிலவும் வெற்றிடங்களுக்கு ஏற்ப அந்தந்தப் பிரதேசங்களுக்கு இந்த அதிகாரிகள் இணைக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த அவர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்:
“எங்கள் வேலையை நாங்கள் செய்துவிட்டோம். இப்போது உங்கள் வேலை. உங்களுடைய வேலையைச் சரியாகச் செய்யுங்கள்.
அரச சேவை பற்றி ஒரு காலம் இருந்தது, அரச சேவையில் பணிபுரிந்தவர்கள் மீது பெரும் மதிப்பு இருந்தது. எந்தவொரு கிராமத்திலாவது ஒரு அரச ஊழியர் இருந்தால், அவர் ஒரு மரியாதைக்குரிய நபராகக் கருதப்பட்டார். இப்போது அந்த காலம் மாறிவிட்டது. 1960-களுக்குப் பிறகு அரச சேவை என்பது வீழ்ச்சியடைந்தது. அரச நிறுவனங்களும் வீழ்ச்சியடைந்தன. அரிதாக சில அரச நிறுவனங்களில் மாற்றம் உள்ளது. அரச வங்கித் கட்டமைப்பில் சில மாற்றங்கள் உள்ளன.
இன்னமும் சில அரச நிறுவனங்களில் உரிய நேரத்திற்கு வேலைகள் நடப்பதில்லை. இன்னமும் ஏதேனும் கொஞ்சம் (பணம்) கொடுத்தால்தான் வேலை நடக்கிறது. மக்கள் அலுவலகங்களுக்கு வந்து பெரும் அலைச்சலுக்குள்ளாகிறார்கள். வருகை தரும் மக்களுக்கு வழங்கப்படும் வரவேற்பு இன்னமும் குறைவாகவே உள்ளது. மக்களுக்கு மேலான இடத்தில் தாங்கள் இருப்பது போன்ற ஒரு மனநிலைதான் உள்ளது. எனவே, இதனை மாற்றியமைக்க வேண்டும். அதுதான் உங்களுடைய பொறுப்பு.
நாங்கள் அரசியல் பக்கத்தைச் சீர்திருத்த முயற்சிக்கிறோம். நாங்கள் சீர்திருத்த வேண்டிய பல பக்கங்கள் உள்ளன அல்லவா? அதில் ஒன்று அரசியல். அரசியல்வாதிக்கும் ஒரு காலத்தில் அரச ஊழியரைப் போலவே நல்லதொரு அங்கீகாரம் இருந்தது.
அரச சேவை வீழ்ச்சியடைந்தது போலவே அரசியலும் வீழ்ச்சியடைந்தது. அதுதான் உண்மைக்கதை. அப்படியென்றால் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய முக்கிய தரப்பு அரசியல்வாதிகள். அரசியல் என்பது சம்பாதிப்பதற்கான ஒரு வழியாக மாறியபோது, நியமனங்கள் வழங்குவது வாக்கு சேகரிக்கும் ஒன்றாக மாறியபோது, தகுதியானவருக்கு தகுந்த இடம் கிடைக்காமல் போனது. நியமனம் கிடைக்கும்போதே வேலை பெறுபவருக்குத் தெரியும், தான் அமைச்சரின் ஆசியினால்தான் வந்தேன் என்று. அப்போதே அவர் அரச சேவைக்குள் நுழையும்போதே வேறு ஒரு இடத்திற்குச் சென்றுவிடுகிறார். அப்படி நடக்கும்போது அரச சேவைக்குச் செய்யும் மரியாதையை விட அமைச்சருக்கு இருக்கும் மரியாதை முன்னுக்கு வருகிறது. எனவே, நாங்கள் இதனை மாற்ற வேண்டும். அதற்காக எங்கள் அதிகாரிகள் குழு பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்த நியமனங்களை வழங்கும் போது நாங்கள் இதில் எந்தவொரு தலையீட்டையும் செய்யவில்லை. அரசியல் தலையீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அரசியல் தலையீடுகளைச் செய்தால், ‘இவர்கள் அரசியலை மாற்ற வந்தவர்கள், இவர்களும் அப்படித்தான் போலும்’ என்று அதிகாரிகள் நினைப்பார்கள். இது பழைய முறையில் நடந்திருந்தால், நீங்கள் அனைவரும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் கண்டிதான் எனது தேர்தல் மாவட்டம். முன்னரெல்லாம் அப்படித்தான் நடந்திருக்கிறது.
ஒருவருக்கு அரச சேவையில் வேலை கிடைப்பது என்பது அவரது வாழ்க்கைக்கு ஒரு பெரிய பலமாகும். அது ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கைக்குப் பெரியதொரு ஆளுமையைச் சேர்க்கிறது. வாழ்க்கைக்கு ஒரு ஸ்திரத்தன்மை கிடைக்கிறது. எமது அமைச்சினூடாகச் சிலரை இணைத்துக் கொண்டோம். அவர்கள் வேலைக்கு வரும்போதே, தாங்கள் கேட்கும் இடத்திற்கே நியமனம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அது ஆச்சரியமான ஒரு அரச சேவைப் பற்று! அரச சேவையில் முதலாவது நியமனம் தரும் இடத்திற்கே செல்ல வேண்டும் என்றொரு விதிமுறை இருக்கிறது அல்லவா? நியமனம் பெற்ற உடனே இடமாற்றங்களைச் செய்துகொள்வதற்காக அமைச்சரைச் சந்திக்க வர வேண்டாம்.”
இந்நிகழ்வில் நிலஅளவையாளர் நாயகம் பி.கே.எல்.எஸ். படுவாவல தவிர்ந்த நிலஅளவைத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் நியமனம் பெற்றவர்கள் கலந்துகொண்டனர்.



