‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்த இருவர், மிகத் தந்திரமாகப் பொலிஸ் சிறைக்கூண்டிலிருந்து தப்பியோடிய சம்பவம் பதிவு
மிஹிந்தலை பொலிஸாரால் நேற்று (03) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதன நடவடிக்கையின் போது, மிஹிந்தலை – அம்பதாலகம பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடைய இரு சந்தேகநபர்கள் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து, 2 கிராம் 250 மில்லிகிராம் மற்றும் 2 கிராம் 300 மில்லிகிராம்
நிறையுடைய ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகப் போதைப்பொருள் சட்ட விதிகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் இருவரையும் இன்றைய தினம் (04) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர் அவர்கள் இருவரும் மிகத் தந்திரமாகப் பொலிஸ் சிறைக்கூண்டிலிருந்து தப்பியோடியுள்ளனர். தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மிஹிந்தலை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



