News

நாட்டின் பொருளாதாரம் ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது – பொதுமக்கள் கண்ணுறும் வகையில் எந்தவொரு சாதகமான மாற்றமும் பொருளாதாரத்தில் தெரியவில்லை – போரின் விளைவுகளைக் காரணம் காட்டி அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது ; முஜிபுர் ரஹ்மான்

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழல் குறித்து அரசாங்கத்திற்கு முறையான புரிந்துணர்வு உள்ளதா அல்லது இந்த நெருக்கடிகளை அவர்களால் சரியாக நிர்வகிக்க முடிகிறதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை மட்டுமே நம்பி அரசாங்கம் இயங்கி வருகிறதே தவிர, நாட்டை மீட்டெடுப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் எதையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் நிலையை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புதிய முதலீட்டாளர்கள் எவரும் நாட்டிற்குள் வரவில்லை என்றும், புதிய திட்டங்கள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், தனியார் துறையின் முதலீடுகள் முடங்கியுள்ளதால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் போயுள்ளன. பொதுமக்கள் கண்ணுறும் வகையில் எந்தவொரு சாதகமான மாற்றமும் பொருளாதாரத்தில் தெரியவில்லை எனவும், மாறாக அரசாங்கத்தின் வெற்றுப் பேச்சுக்கள் மற்றும் ஆடம்பரக் கூற்றுகள் மட்டுமே இன்னும் குறையாமல் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் சாடினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு உலகளாவிய போர்தான் காரணம் என அரசாங்கம் கூறுவது குறித்துக் கேள்வி எழுப்பிய முஜிபுர் ரஹ்மான், போரினால் பாதிப்புகள் ஏற்படுவது உண்மைதான் என்றும், போருக்கு அதன் விளைவுகள் உண்டு, உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் அது உண்டு என்றும் குறிப்பிட்டார். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கும் கூட போரின் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், போரின் விளைவுகளைக் காரணம் காட்டி அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button