News

இன்று அதிகாலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்  மீது  மின்னல் தாக்கியதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது

சிட்னி நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்னல் தாக்கியதையடுத்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மீண்டும் அவசரமாகத் திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.



ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL-606 எனும் இந்த விமானம், இன்று (12) அதிகாலை 1:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிட்னி நோக்கிப் புறப்பட்டது.



ஏர்பஸ் A330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில், சம்பவத்தின் போது 217 பயணிகள் மற்றும் 16 விமானப் பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர்.



விமான நிலையத்திற்கு அருகாமையில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் மின்னல் தாக்கத்தின் காரணமாக, விமானத்தின் மீது மின்னல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், விமானி பயணத்தை இடைநிறுத்தி, அதிகாலை 1:40 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை மீண்டும் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.



பாதிக்கப்பட்ட பயணிகளை சிட்னிக்கு அழைத்துச் செல்வதற்காக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதே ரகத்தைச் சேர்ந்த மற்றொரு ஏர்பஸ் A330 விமானத்தை ஏற்பாடு செய்தது. குறித்த மாற்று விமானம் இன்று காலை 6:06 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.



இதனிடையே, மின்னல் தாக்குதலுக்குள்ளான விமானம், மேலதிக பரிசோதனைகள் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஹேங்கருக்கு (Hangar) கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button