சுரேஷ் சலேவுக்கு ஆதவாக சத்தியாகிரக போராட்டம் செய்த விமல் வீரவன்ச, ஏன் அவரது மனைவி மற்றும் சகோதரருக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போது அமைதியாக இருக்கிறார் ?

சுரேஷ் சலேவுக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்பட்டபோது கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்த விமல் வீரவன்ச, தனது மனைவி மற்றும் சகோதரருக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்பட்டபோது ஏன் அமைதி காக்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனத் தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற ‘மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தக பிணக்குகள்) சட்டமூலம்’ மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகத் தயாசிறி ஜயசேகர எம்.பி சபையில் தெரிவித்தார். ‘வழக்கறிஞர்’ என்ற தகுதியுடைய ஒருவர் இத்தகைய பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவது ஏற்புடையதல்ல. சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டார் என்றால், இவர்கள் ஏன் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடவில்லை?
விமல் வீரவன்சவின் மனைவிக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது; அவரது சகோதரருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராகச் சட்டம் பாய்ந்தபோது உண்ணாவிரதம் இருக்காத விமல் வீரவன்ச, சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக மட்டும் ஏன் கூடாரம் அமைத்துப் போராடுகிறார்? அரசியல் இலாபத்திற்காகவும், விசாரணைகளைத் திசைதிருப்பவுமே எதிர்க்கட்சியினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு எதிராகச் சட்டம் முறையாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. தவறான கருத்துக்களையும் பொய்களையும் பரப்பி நாட்டு மக்களைத் திசைதிருப்ப அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான மக்களை இவர்களால் ஏமாற்ற முடியாது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதன் மூலம் நாட்டு மக்கள் செய்த தியாகங்களுக்கு இன்று பெறுமதி கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.


