News

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்து விட்டன – ஆகவே உடனே அரசாங்கம் இலங்கையில் எரிபொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் ; சஜித்

தற்போதைய அரசாங்கம் மத்திய கிழக்கு போரை காரணமாகக் காட்டி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளது எனக் கூறி இலங்கையிலும் எரிபொருட்களின் விலைகளை கூட்டியது. ஆனால் இன்றைய நிலரவரப்படி போருக்கு முந்தைய நிலையோடு ஒப்பிடும் போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன.

சர்வதேசத்தில் எண்ணெய் விலை கூடும்போது இலங்கையிலும் விலை கூடும் என்றால், உலகில் எண்ணெய் விலை குறையும்போது இலங்கையிலும் குறைய வேண்டும். ஆகவே அரசாங்கம் அதிகரித்ததைப் போலவே, உடனே அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நமது நாட்டில் எண்ணெய் மீது அதிக வரி விகிதம் விதிக்கப்படுகின்றன. இவர்கள் ஆட்சிக்கு வரும்வேளை இந்த வரிகளை நீக்கி விட்டு, துறைமுகத்தில் இறக்குமதியாகும் அதே விலைக்கே எரிபொருட்களைத் தருவோம் என்று பெரிதாக பிரஸ்தாபித்தனர்.

இருந்த போதிலும், துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் விலையிலோ அல்லது உலக சந்தையில் எண்ணெய் விலை குறையும் மட்டத்திற்கு ஏற்ப ஏனும், குறைந்த விலையில் எரிபொருட்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாகவே இன்றுவரையில் இருந்து வருகின்றனர். இதனால் நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையீனத்தில் காணப்படுகின்றனர். இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து போயுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் பொய் அரசியலையே செய்து வருகின்றது. உருட்களை செய்து வருகின்றது. மக்களை இவ்வாறு தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது போலும். நாட்டின் 220 இலட்சம் மக்களையும் முட்டாள்கள் என கருதி செயற்பட்டு வருகின்றது. மக்கள் அரசாங்கத்தின் வழிக்கு ஆடுவார்கள் என்ற கீழ்தரமான கருத்துடன் இந்த அரசாங்கம் தமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

ஈரானும் அமெரிக்காவும் சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளன. இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ள இந்த தருணத்தில், விலைகளை கூட்டியதற்கு பயன்படுத்திய சுலோகத்தை அவ்வாறே பிரயோகித்தி, நாட்டில் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டும். அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் பொய்கள், உருட்களை மட்டுமே செய்து வரக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் பொய்யால் மக்களை ஏமாற்றிவிட்டது. இதனை நன்றாகவே செய்துள்ளது. இதனாலேயே மக்கள் அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கையிழந்துபோயுள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் விற்பனை பொருள் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகளை பணத்திற்கு வாங்க முடியாது.

பணத்துக்கு விலை போக மாட்டனர். மக்கள் துயருக்காக எப்போதுமே குரல் கொடுப்போம். ஆகவே உடனே அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலயே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button