முஸ்லிம் ஊடகங்கள் தொடர்பான பாராளுமன்ற உரைக்கு அதிருப்தி!
பிரதியமைச்சர் முனீர் முளப்பருக்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் கடிதம்!
முஸ்லிம் ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வோர் இனவாத சக்திகளுக்குத் துணை போவதாக சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் பிரதியமைச்சருக்கு 18.06.2026 திகதியிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த 11.06.2026 அன்று
பாராளுமன்றத்தில் தாங்கள் உரை நிகழ்த்திய போது, “முஸ்லிம் சமூக விவகாரங்களை அறிக்கையிடும் முஸ்லிம் ஊடகங்கள், தமது செய்தி அறிக்கையிடல்கள் மூலம் இனவாத சக்திகளுக்குத் துணைபோகும் வகையில் நடந்து கொள்கின்றன” எனக் குற்றம்சாட்டியிருந்தீர்கள். இந்த ஆதாரமற்ற பாரதூரமான குற்றச்சாட்டு தொடர்பில் எமது பலத்த அதிருப்தியையும் கவலையையும் தங்களுக்குத் தெரியப்படுத்தும் பொருட்டே இக்கடிதத்தை அனுப்புகிறோம்.
முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி இயங்குகின்ற ஏதேனும் ஊடகங்களோ அல்லது ஊடகவியலாளர்களோ அவ்வாறான பக்கச்சார்பான பின்னணிகளைக் கொண்டிருப்பின் அல்லது தமது செய்தி அறிக்கையிடல்களில் உண்மைக்குப் புறம்பான விடயங்களை உள்ளடக்கியிருப்பின், அவற்றை ஆதாரபூர்வமாக, உரிய தரப்பினரின் பெயரை குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டுவதே முறையானதும் பொருத்தமானதுமாகும். அதனை விடுத்து, முஸ்லிம் சமூக மற்றும் சமய விவகாரங்கள் தொடர்பில் ஊடக நெறிமுறைகளைப் பேணி, நடுநிலையாக அறிக்கையிட்டு வரும் ஒட்டுமொத்த ஊடகங்களையும் உள்ளடக்கும் வகையில் தாங்கள் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும்.
அண்மைக்காலங்களில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து முஸ்லிம் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சமூகப் பொறுப்புணர்வுடன் மக்களை விழிப்பூட்டும் வகையில் செய்திகளை வெளியிட்டிருந்தனர். இது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்களின் இன்றியமையாத கடமையுமாகும். இவ்வாறானதொரு பின்னணியில், எவ்வித சான்றுகளுமின்றி பொதுப்படையாகத் தாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டு, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் மனவேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயம் அமைப்பின் அங்கத்தவர்களால் எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, கடந்த 15.06.2026 அன்று நடைபெற்ற எமது செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இக்கடிதம் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான பாரதூரமான மற்றும் பொதுப்படையான குற்றச்சாட்டுக்களை பாராளுமன்றம் உள்ளிட்ட உயரிய சபைகளில் முன்வைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், தாங்கள் சபையில் முன்வைத்த மேற்படி கருத்தை திருத்திக் கொள்வதுடன், ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் ஊடகங்களின் சுயாதீன செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து, ஊடகவியலாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம் என்றும் அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



