News

நிலைமையைக் கண்காணிக்க சிறைக்குள் செல்ல எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.. – மனித உரிமைகள் ஆணைக்குழு

மினுவாங்கொடை (மீகமுவ/நீர்கொழும்பு) சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளில் பதிவான சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த மோதல்களுக்கு வழிவகுத்த பின்னணி, கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தமை மற்றும் காயமடைந்தமை, அத்துடன் கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்களா அல்லது தவறாக நடத்தப்பட்டார்களா என்பது குறித்து இங்கு தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.

மினுவாங்கொடை சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட இரண்டு கைதிகள், சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்தபோது உயிரிழந்தமை குறித்தும் இந்த விசாரணையின் மூலம் கண்டறியப்படும் என ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளிடம் இருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், விசாரணைகள் முடியும் வரை எவ்வித முடிவுகளுக்கும் வர முடியாது எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட அவதானிப்பு விஜயங்களின் போது, காயமடைந்த சில கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கும் ஆணைக்குழு, சிகிச்சைகளை திட்டமிட்டபடி தாமதப்படுத்துவது ஒரு வகையான பழிவாங்கும் செயலாக கருதப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த ஜூலை 7ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்அறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு விஜயத்தின் போது, ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து ஆணைக்குழு தனது பலத்த கவலையை வெளியிட்டுள்ளது.

இது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தை மீறும் செயலாகும் என்றும், இதன் மூலம் சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம் பலவீனமடைவதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறது.

மறுநாள் சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி கிடைத்த போதிலும், அந்த தாமதத்தின் காரணமாக உரிய நேரத்தில் விசாரணையை மேற்கொள்ளும் வாய்ப்பு இழக்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த இடையூறுகள் குறித்து விளக்கமளிப்பதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் (பActing) மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஆகியோர் ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

Recent Articles

Back to top button