ஹவுஸ் ஒஃப் ஃபேஷன் போன்ற வர்த்தகர்களை அரசாங்கம் கைது செய்து துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் – இந்நாட்டில் ஒரு சில சிங்கள பௌத்த வர்த்தகர்களே உள்ளனர்; அவர்களைப் பாதுகாக்க வேண்டும் ; சாமர சம்பத்

உள்ளூர் வர்த்தகர்களை அரசாங்கம் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். ஹவுஸ் ஒஃப் ஃபேஷன் (House of Fashion) உரிமையாளர் தனது சொத்துகளின் மதிப்பைத் குறைவாகக் காட்டியமைக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறித்துக் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“இந்நாட்டில் ஒரு சில சிங்கள பௌத்த வர்த்தகர்களே உள்ளனர்; அவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“ஆளுங்கட்சியுடன் தொடர்பில்லாத வர்த்தகர்களைத் துன்புறுத்தும் ஒரு ஆபத்தான போக்கு நிலவுகிறது. ஒரு வர்த்தகர் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவுடனோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாசவுடனோ தொடர்பில் இருந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்படுகிறார்கள். எவ்வாறாயினும், ஆளுங்கட்சியுடன் தொடர்பில் உள்ள வர்த்தகர்களுக்கு எதிராக இவ்வாறான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை” என்று அவர் கூறினார்.
“இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள், வர்த்தகர்களும் தொழில்முனைவோரும் துன்புறுத்தப்படும் போது ஒருபோதும் வளர்ச்சியடைய முடியாது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எதிர்க்கும் நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்கும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைப் போன்று எவரேனும் நடந்து கொண்டால் வெற்றிபெற முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி, ஹவுஸ் ஒஃப் ஃபேஷன் நிறுவனத் தலைவரின் கைதுக்கும் அரசாங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அவருக்கு எதிராகச் சட்ட அமலாக்க நிறுவனங்களே அந்த நடவடிக்கையை மேற்கொண்டன என்றும் தெரிவித்தார்.


