News

“நீ சமிந்த தானே?” எனக் கேட்டு வீட்டில் TV பார்த்துக் கொண்டிருந்த  நபர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு –  துப்பாக்கி இயங்காததால் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம்

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெம்பிள் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசித்து வரும் நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

நேற்று (21) இரவு 10.30 மணியளவில் குறித்த நபர் வீட்டின் மேல் மாடியில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இனந்தெரியாத இருவர் “நீ சமிந்ததானே?” எனக் கேட்டு அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளனர்.

அந்த நேரத்தில் வீட்டில் அவர் மட்டுமே இருந்துள்ளதுடன், கைத்துப்பாக்கி போன்ற ஒரு ஆயுதத்தால் சுட முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில் துப்பாக்கி இயங்கவில்லை.

இது தொடர்பாக அண்டை வீட்டார் ஒருவர் கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிதாரிகள் வீட்டிற்குள் நுழைந்தபோது அந்த நபரை உதைத்துள்ளதுடன், பின்னர் அருகிலிருந்த நாற்காலியால் தாக்கியதில் வீட்டின் உரிமையாளரின் தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு அவர் வீட்டிலிருந்து தப்பிச் சென்று அருகில் உள்ள தனது நண்பரின் வீட்டில் ஒளிந்துகொண்டுள்ளார்.

இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் அந்த வீட்டிற்கும் சென்று கதவைத் தட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்ததற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. வீட்டின் உரிமையாளர் ஏசி (AC) இயந்திரங்களை பழுதுபார்க்கும் ஒரு தொழில்நுட்பக் கலைஞர் எனத் தெரியவந்துள்ளது.

வீட்டின் உரிமையாளர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டதில்லை என்ற போதிலும், அவரது மகன் இரண்டு சந்தர்ப்பங்களில் பின்வரும் குற்றங்களுக்காகக் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்:

2024.01.26 அன்று கஞ்சா கடத்திய குற்றத்திற்காகக் கல்கிஸ்ஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2025.05.12 அன்று கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காகக் கல்கிஸ்ஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button