லால் காந்தவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கும் வரை போராட்டம்…

விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தவை உடனடியாக அப்பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி, வரும் வெள்ளிக்கிழமை முதல் பாரிய போராட்ட இயக்கமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அமைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இதனைத் தெரிவித்தார்.
விவசாய அபிவிருத்திச் சட்டத்தை மீறி, வயல் நிலங்களை ஏனைய பயிர்ச்செய்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துவருவதாக தென்னகோன் இங்கு குற்றம் சுமத்தினார்.
தற்போதுள்ள சட்டதிட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகளின்படி வயல் நிலங்களை நிரப்புவதோ அல்லது வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதோ தடை செய்யப்பட்டுள்ள போதிலும், மக்காச்சோள விதைகளை இறக்குமதி செய்யும் பெரு அளவிலான நிறுவனங்களின் ஒப்பந்தத்தை அமைச்சர் நிறைவேற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்த தலைவர், அவர் விவசாய சமூகத்தின் பிரச்சினைகளை உணராமல் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாகவும், ஊடகங்களுக்கு முன் பொய் உரைகளை நிகழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
“லால் காந்த விவசாய அமைச்சர் பதவியிலிருந்து விலகும் வரை அல்லது அரசாங்கம் அவரை நீக்கும் வரை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நாங்கள் ஒரு புதிய சுற்றில் போராட்டத்தைத் தொடங்குவோம். விவசாய மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் இந்தப் போராட்டத்தைக் கைவிட மாட்டோம்,”
என்று அனுராத தென்னகோன் மேலும் வலியுறுத்தினார்.



