News

செயல்திறனற்ற ஜனாதிபதியும், அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு கொண்டு செல்கிறார்கள் – மேலும் நாம் யாருக்கும் அரசியல் இலஞ்சம் வழங்கியதுமில்லை, வழங்கப் போவதுமில்லை -சஜித்


தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில்  ஞாயிற்றுக்கிழமை (26) கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தேயிலை, இறப்பர், ஆபரணம் மற்றும் இரத்தினக்கற்கள் போன்ற நமது நாட்டின் வளங்களை மேம்படுத்த அரசாங்கத்திற்கு இயலாமற்போயுள்ளது. பொய்யும் புரட்டும் கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை வென்றவர்கள், தற்போது பொய்களாலும் புரட்டுகளாலும் அதிகாரத்தைத் தக்கவைக்க முயற்சித்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.



பாராளுமன்றத்தில் ஜே.வி.பியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய அவர்களுக்கு முதலமைச்சர் வேட்பாளர் பதவியைப் பெற்றுத் தருவேன் என நான் வாக்களித்துள்ளதாகப் பிரஸ்தாபித்தார். 

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயெல்லையை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அவர் நடந்துகொள்வதாலேயே அந்த வேட்பாளர் பதவியை பெற்றுத் தருவேன் எனக் கூறியுள்ளார். 

திசைகாட்டியின் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்குப் பின்னால் ஒழிந்துகொண்டே இவ்வாறு பொய்களைக் கூறி வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நீதிமன்ற அதிகாரத்தைப் பெலவத்தையிலிருந்து இயக்கவே இந்த மக்கள் விடுதலை முன்னணியினர் முயற்சித்து வருகின்றனர்

இவை அனைத்தையும் செய்துகொண்டு நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கு மரண அடி கொடுத்து, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. நீதிமன்றங்களின் அதிகாரத்தை அரசாங்கம் பலவந்தமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படுகின்றது. இன்றும் கூட உயர்நீதிமன்றங்களில் வெற்றிடங்கள் காணப்பட்டாலும் அவற்றை நிரப்புவதற்கு இவர்கள் நடவடிக்கை எடுத்தபாடில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நாம் யாருக்கும் அரசியல் இலஞ்சம் வழங்கியதுமில்லை, வழங்கப் போவதுமில்லை

ஐக்கிய மக்கள் சக்தி எந்நேரத்திலும் திசைகாட்டி கூறும் அரசியல் இலஞ்சங்களைக் கொடுத்ததில்லை. நாட்டு மக்களைப் பொய்களாலும் புரட்டுகளாலும் ஏமாற்றி நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்ல முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே நாட்டிற்கான கடமையை ஆற்றிவருகின்றது. கட்சியாக முதுகெலும்புடன் நின்று சுதந்திரமான, பக்கச்சார்பற்ற நீதிமன்றம் குறித்துப் பேசும் உரிமை ஐக்கிய மக்கள் சக்திக்கு மாத்திரமே காணப்படுகின்றது.

சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களைப் போல நாம் கௌரவ நீதிபதிகளைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு அழைத்து அழுத்தம் கொடுக்கவில்லை. இன்றும் கூட முதுகெலும்புடன் மக்களின் முன்னால் நிற்பதற்கும், நீதிமன்றத்திற்காகக் குரல் கொடுப்பதற்கும் ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button