விரைவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளியுறவு செயலாளர் ஆகியோரை சந்திக்க உள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

இலங்கை தமிழ் பேசும் கட்சிகளின் பேரவையாக இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்திய வெளியுறவு செயலாளரை விரைவில் சந்திக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நேற்று (31) திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை தமிழ் பேசும் கட்சிகள் கூட்டாகச் சந்தித்து, தமது சமூகங்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அதேநாளில் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திக்க முயற்சி மேற்கொள்ளப் படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும், இலங்கைக்கு விரைவில் வரவுள்ள இந்திய வெளியுறவு செயலாளரையும் சந்தித்து 13ஆவது திருத்தம், மாகாண சபைத் தேர்தல், தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சினை இரு நாடுகளின் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய மனிதாபிமான விடயம் என்பதால், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இந்தியாவின் அபிவிருத்தி உதவிகள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
மேலும், யுத்தக் காலத்தில் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பான கோரிக்கையையும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்வைக்கவுள்ளதாக கூறியுள்ளார்.



