அண்மையில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்கள் – அசாதாரன நிலமைகள் என்பன அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டசதி ; SJB பொதுச் செயலாளர்

சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவான தொடர்ச்சியான மரணங்கள் மற்றும் பதற்றமான சம்பவங்கள், நாட்டில் அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட ஒரு சதியின் விளைவா என்பது குறித்து தமக்கு சந்தேகம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பாதாள உலகத்தை அடக்கிவிட்டதாகக் கூறும் அரசாங்கத்தால், சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருப்பது வேடிக்கையான விஷயம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
சிறைச்சாலைகளில் இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பதிவாவது தற்செயலானது அல்ல என்றும், முதல் சம்பவத்தை சமூக ஊடகங்கள் மூலமாகவே அறிந்துகொண்டதாகக் கூறிய பொறுப்பான அமைச்சரின் கூற்றிலிருந்தே அரசாங்கத்தின் செயலின்மை தெளிவாகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“சிறையில் அடைப்பது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக அல்ல. போக்குவரத்து குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர் கூட அங்கு உயிரிழந்துள்ளார்.
இவற்றைக்கூட கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம் எப்படி ஒரு நாட்டை ஆட்சி செய்யும்?” என்று மத்தும பண்டார கேள்வி எழுப்பினார்.
கடந்த தேர்தலில் 42 சதவீத ஆணையை மட்டுமே பெற்ற அரசாங்கம், தற்போது மக்களிடமிருந்து விலகிச் செல்வதாகவும், அந்த மக்கள் எதிர்ப்பை அடக்கவும் எதிர்க்கட்சியை ஒடுக்கவும் இதுபோன்ற செயற்கை நெருக்கடிகளை உருவாக்கி அவசரகாலச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் முயல்வதாகத் தாம் சந்தேகப்பவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருடர்களைப் பிடிப்பதன் பேரில் நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க இடமளிக்க முடியாது என்றும் பொதுச்செயலாளர் இங்கு வலியுறுத்தினார்.



