தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள்

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் (National Delimitation Commission) முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் ஒருவரை நியமிக்குமாறு இலங்கை முஸ்லிம் கவுன்சில் (MCSL) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையிலும், கலாநிதி கே. தவலிங்கம் மற்றும் ரோஹண புஷ்பகுமார ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் நியமனத்தை வரவேற்பதாக, முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என். எம். அமீன் மற்றும் செயலாளர் எம். டி. எம். ரிஸ்வி ஆகியோரால் ஆகஸ்ட் 20, 2026 அன்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இம்முறை முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எவரும் இதில் சேர்க்கப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த காலங்களில் கலாநிதி எம். எச். ஹஸ்புல்லாஹ், ஏ. எம். நஹியா மற்றும் எம். ஐ. எம். அமீர் போன்றோர் இவ்வாணைக்குழுவில் உறுப்பினர்களாகப் பணியாற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள கவுன்சில், இம்முறை இடம்பெற்றுள்ள விடுபடலானது ஒரு தவறுதலாக இருக்கலாம் எனக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இலங்கை அரசியலமைப்பின் 95வது உறுப்புரையின்படி எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு ஐந்து உறுப்பினர்கள் வரை நியமிக்கப்பட முடியும் என்பதால், முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை ஆரம்பத்திலேயே நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொகுதி எல்லைகளை மறுசீரமைத்தல், மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்தல் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பேணுதல் ஆகியவை இந்த ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்புகளாகும். எனவே, முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை ஆரம்ப நிலையிலேயே உள்ளடக்குவது மிகவும் அவசியமானது என முஸ்லிம் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.
நாடளாவிய ரீதியில் இயங்கும் 80க்கும் மேற்பட்ட பிரதான முஸ்லிம் அமைப்புகளை உள்ளடக்கிய உச்ச அமைப்பான இலங்கை முஸ்லிம் கவுன்சில், இந்த விவகாரத்தில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட்டு நேர்மறையான தீர்வை வழங்குவார் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.



