நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க தீர்மானம்

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நிதிப்பங்களிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணங்கள் மற்றும் மானுட அபிவிருத்தி உதவிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள துயரங்கள் குறித்து ஜனாதிபதி தனது பலத்த கவலையை தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த கடினமான சந்தர்ப்பத்தில் இலங்கை நேபாள மக்களுடன் உறுதியாக நிற்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சிசிர் கனாலுடன் இன்று காலை தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டு இலங்கையின் இரங்கல், ஆதரவு மற்றும் சகோதரத்துவத்தை தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளுக்காக எதிர்காலத்தில் இலங்கை வழங்கக்கூடிய மேலும் பொருத்தமான ஒத்துழைப்பு முறைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.



