கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி இருவர் உயிரிழப்பு – மூவர் நிலை கவலைக்கிடம்
கொழும்பு 15, மட்டக்குளிய – அளுத்மாவத்தை வீதியில், கந்தஉட பிரதேச சந்திப்பில் கொட்டாஞ்சேனையை நோக்கிச் செல்லும் வீதியில் பயங்கரமான வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
அதிக வேகத்தில் பயணித்த கார் ஒன்றை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி, அவற்றுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து மிகவும் பாரதூரமானதாக அமைந்துள்ளதுடன், இதில் இரண்டுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற இடத்திலேயே இருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களும் ஆபத்தான நிலையில் இருந்தவர்களும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்



