ஒரே நபருக்கு 10 முறை சேதம் ஏற்பட்டிருந்தால் 10 முறையும் நஷ்டஈடு வழங்கினோம்.. – பிரதியமைச்சர்
நெல் பயிரிடப்படும் நிலங்களில் மேலதிக பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரம் மானியம் வழங்கப்படவில்லை என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் செய்யாத வகையில் தற்போதைய அரசாங்கம் விவசாய மக்களுக்கு அதிகபட்ச சலுகைகளை வழங்கியுள்ளது என்றும் விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட செயலக வளாகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதியமைச்சர், கடந்த அரசாங்க காலத்தில் 5 ஏக்கருக்கு 30,000 ரூபாய் உரம் மானியம் மட்டுமே வழங்கப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் அந்த தொகையை 60,000 ரூபாயாக இரட்டிப்பாக்கியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
நெல் பயிரிடப்படும் காடணி நிலங்களில் மேலதிக பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இதற்கு முன்னர் எந்தவொரு மானியமும் கிடைக்கவில்லை என்பதை நினைவூட்டிய அவர், தற்போதைய அரசாங்கம் கடந்த சில போகங்களாக அந்த விவசாயிகளுக்கு தொடர்ந்து மானியங்களை வழங்கியதாகவும், எதிர்காலத்தில் போகக் கூட்டங்களின் தீர்மானங்களுக்கு அமைவாக மேலதிக பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் உரம் மானியத்தை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.
இயற்கை அனர்த்தங்களின் போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நஷ்டஈடு தொகை குறித்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் பின்வருமாறு கூறினார்:
“கடந்த காலங்களில் அனர்த்தங்கள் ஏற்பட்ட போது விவசாயிகளுக்கு மிகவும் அற்பமான தொகையே கிடைத்தது. ஆனால் நமது அரசாங்கத்தின் கீழ் ஒரே நபரின் பயிர்களுக்கு பத்து முறை சேதம் ஏற்பட்டிருந்தால், அந்த பத்து முறைகளுக்கும் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்தோம். எந்தவொரு அரசாங்கமும் இதற்கு முன்னர் இவ்வாறு செயல்படவில்லை.”
இதற்கிடையில், பொலன்னறுவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள் விவசாயிகள் அல்லாத வேறு தொழிலாளர்களா என ஊடகவியலாளர்கள் வினவிய போது கருத்து தெரிவித்த அவர், பொலன்னறுவை மாவட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் விவசாய மக்கள் என்பதால் அங்கு விவசாயம் செய்யாத ஒரு குடும்பத்தைக் கண்டறிவது கூட கடினம் என்றும், இதுபோன்ற வாதங்கள் வெறும் வேடிக்கையான கூற்றுகள் மட்டுமே என்றும் மேலும் தெரிவித்தார்.



