News

சவூதி அரேபிய விமானப் படைக்குச் சொந்தமான, அமெரிக்க தயாரிப்பு F-15 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ..ஹூதி போராளிகள்

சவூதி அரேபிய விமானப் படைக்குச் சொந்தமான, அமெரிக்கத் தயாரிப்பான F-15 ரகப் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளதாக ‘த வோல் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (The Wall Street Journal) செய்தித் தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

அரேபிய தீபகற்பத்தை மையமாகக் கொண்டு நிலவும் மோதல்கள் தீவிரமடைந்து வருவதால், உலகளாவிய எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படும் தடைகள் மேலும் அதிகரிக்கும் பின்னணியில், தீப்பிடித்துச் சிதைந்த விமானத்தின் பாகங்களைக் காட்டும் வீடியோ காட்சிகளையும் ஹூதிகள் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சவூதி அரேபியாவின் ஊடக அமைச்சு இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாத போதிலும், சவூதி போர் விமானமொன்று வீழ்ந்து நொறுங்கியதை இரு தகவல் மூலங்கள் உறுதிப்படுத்தியதாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜர்னல்’ குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலமாக இடம்பெற்ற மோதல்களின் போது, யேமனின் எந்தவொரு இலக்கின் மீதும் தங்களுக்கு விருப்பமான முறையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தும் ஆற்றல் சவூதி அரேபியாவிற்கு இருந்தது.

எனினும், அமெரிக்க தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மிகவும் நவீன ரக எஃப்-15 (F-15) விமானத்தை இவ்வாறு சுட்டு வீழ்த்துவதற்கு ஹூதிகளால் முடிந்துள்ளமை, அவர்களிடம் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பின் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காட்டுவதாக இராணுவ பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் நிறைந்த ‘மாரிப்’ (Marib) பகுதியில் உள்ளூர் தயாரிப்பு ஏவுகணையொன்றைப் பயன்படுத்தி இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹூதிகள் வெளியிட்ட வீடியோ காட்சிகளில், பாலைவனப் பகுதியில் சிதறிக் கிடக்கும் விமானத்தின் இறக்கைகள், எஞ்சின் பாகங்கள் உள்ளிட்ட இடிபாடுகள் காணப்படுவதுடன், விமானத்தின் வால் பகுதியில் சவூதி அரேபிய தேசியக் கொடி பொறிக்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

இருப்பினும், விமானத்தில் இருந்த விமானி அல்லது ஆயுத செயல்பாட்டாளரின் நிலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதற்கு முன்னரும் பல்வேறு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்பட்ட ஹூதிகளின் கூற்றுகளைச் சவூதி அரேபியா மறுத்து, அவை தொழினுட்பக் கோளாறுகளால் ஏற்பட்ட விபத்துகள் எனக் கூறியிருந்தது. இச்சம்பவம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டால், சமீபத்திய மோதல்கள் தீவிரமடைந்த நிலையில் சவூதி அரேபியா இழக்கும் முதல் எஃப்-15 (F-15) விமானமாக இது அமையும்.

சமீபத்திய வாரங்களில் பாப் அல்-மந்தெப் (Bab al-Mandeb) நீரிணையில் அமைந்துள்ள ஒரு தீவு உட்பட மேலும் பல முக்கிய மூலோபாயப் பகுதிகளைக் கைப்பற்றுவதில் ஹூதிகள் வெற்றியடைந்துள்ளனர். இதன் மூலம் செங்கடல் வழியாகச் செல்லும் சவூதி எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்திற்குத் தடை ஏற்படுத்தும் தங்களது திறனை அவர்கள் மேலும் வலுப்படுத்தியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு முதல் சவூதி ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கத்திற்கும் ஹூதிகளுக்கும் இடையே உத்தியோகபூர்வமற்ற போர்நிறுத்தம் நிலவி வந்ததுடன், ஹூதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள அரச ஊழியர்களின் சம்பளத்தைக் கூடச் சவூதி அரேபியாவே வழங்கி வந்தது.

எனினும், 2023 அக்டோபர் 07 அன்று ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து உருவான காஸா போருடன் மீண்டும் களமிறங்கிய ஹூதிகள், 100 க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் இஸ்ரேல் மீதும் தாக்குதல்களை நடத்தினர். ஹோர்முஸ் (Hormuz) நீரிணையின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில், ஹூதிகள் இவ்வாறு தங்களது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர் என்று ‘வோல் ஸ்ட்ரீட் ஜர்னல்’ அறிக்கை மேலும் வலியுறுத்துகிறது.

Recent Articles

Back to top button