9 ‘A’ சித்தி பெற்ற 17 வயது மகன் – போதைப்பொருள் வாங்க பணம் தராததால் தாயை தடியால் அடித்துக் கொ*லை செய்த சம்பவம்
போதைப்பொருள் உட்கொள்வதற்காக தாயிடம் பணம் கேட்டு மிரட்டிய யாழ்ப்பாணம், அச்சுவேலி – புத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மகன், தாய் பணம் தராததால் கோபமடைந்து, கடந்த 14ஆம் திகதி தாயை தடியால் அடித்துக் கொன்றுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், அச்சுவேலி புத்தூர் மேற்கு, சிவ தேவாலய வீதியில் வசித்து வந்த 74 வயதுடைய பெண் ஆவார்.
இவரது மகன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்வி கற்று, கடந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் (G.C.E. O/L) 9 ‘A’ சித்திகளைப் பெற்ற திறமையான மாணவனாவார்.
பாடசாலைக் காலத்தில் போதைப்பொருள் உட்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இவனையும் அவனது இரு நண்பர்களையும் அதிபர் பாடசாலையிலிருந்து நீக்கியிருந்தார்.
எனினும், போதைப்பொருளுக்கு அடிமையான இம்மாணவன் வழக்கமாக தாயிடம் பணம் பெற்று போதைப்பொருள் உட்கொண்டு வந்த நிலையில், சம்பவத்தன்று தாய் பணம் தராததால் அவரை தடியால் தாக்கி கொலை செய்துள்ளான்.
தாய் வாழ்வதற்காக வெளிநாடுகளில் உள்ள ஏனைய பிள்ளைகள் பணம் அனுப்பி வந்துள்ளதாகவும், அந்தப் பணத்தில் பாதியை இக்கொலைகார மகன் தாயை மிரட்டிப் பெற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் உட்கொண்டு வந்ததாகத் தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த வீட்டை சோதனையிட்ட போது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



