News

நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த நபர் ‘ஐஸ்’ போதைப்பொருள், பணத்துடன் சம்மாந்துறை பொலிஸாரினால் வாகனத்துடன் கைது

நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த நபர் ‘ஐஸ்’ போதைப்பொருள், பணத்துடன் வேனில் கைது

பொலிஸாரை ஏமாற்றித் திரிந்தவர் அல் முனீர் வீதியில் வைத்து வளைத்துப் பிடிப்பு

  பாறுக் ஷிஹான்

நீண்ட காலமாகப் பொலிஸாரைத் தப்பித்து ஏமாற்றி வந்த சந்தேக நபர் ஒருவர், வேன் ஒன்றில் பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் பணத்தைக் கடத்திச் சென்ற போது சம்மாந்துறை பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் நேற்று (18) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரே, அல் முனீர் வீதியில் வைத்து அவர் பயணித்த வேனுடன் பொலிஸாரினால் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பணத்தொகையும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்ன, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல ஆகியோரின் உத்தரவின் பேரில், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் இச் சோதனை நடத்தப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக் கைது நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயற்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button