உடல் வலியை தாங்க முடியாமலே உயிரை மாய்த்துக் கொள்வதாக லொஹான் ரத்வத்தவின் செயலாளர் பஸ்நாயக்க கடிதம் எழுதி வைத்துள்ள நிலையில் விசாரணைகள் CID க்கு பாரம் கொடுக்கப்பட்டது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளரின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரின் கட்சி அலுவலகத்தில், அவரது தனிப்பட்ட செயலாளர் பி.எம்.ஏ.எஸ். பஸ்நாயக்க (50 வயது) சடலமாக மீட்கப்பட்டார்.
முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதில் இந்த மரணம் தற்கொலை என தெரியவந்துள்ளது.
இதன்போது உயிரிழந்தவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றும் அங்கிருந்து மீட்கப்பட்டது.
இதில், “உடல் வலியால் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தாலும் குணமாகவில்லை. பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன். ஆனால் பலனில்லை. எனது மன உளைச்சல் என்னை கடுமையாக பாதிக்கிறது, அதனால் இந்த வலியை இனி என்னால் தாங்க முடியாது.
அதனால் என் வாழ்க்கையை விட்டுவிட முடிவு செய்தேன். எனது இறுதிச் சடங்குகளை விரைவில் முடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின் படி, இது தற்கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் இது சமூகத்தில் பெரிதும் பேசப்படும் சம்பவம் என்பதால், மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்