பிள்ளையானைச் சந்தித்தமை குறித்து நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நாமல் ராஜபக்ச அளித்துள்ள பதில்..
SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகளுடன் தொடர்புடையதாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைச் சந்தித்தமை குறித்து நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.
பிள்ளையான் சிறையில் இருந்தபோது அவரைச் சென்று பார்வையிட்டமை “இரகசியமான ஒன்றல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் பிள்ளையானை தான் சிறையில் சந்தித்ததை சிறைச்சாலை பதிவுகள் உறுதிப்படுத்தும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அந்த நேரத்தில் டிஎம்விபி தலைவர் தங்களது கூட்டணியின் ஒரு அங்கமாக இருந்ததோடு, 2015 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தங்களுடன் இணைந்து போட்டியிட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“டிஎம்விபி தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் 2018/19 காலப்பகுதியில் சிறையில் இருந்தபோது நான் அவரைச் சென்று சந்தித்தது இரகசியமான ஒன்றல்ல. உண்மையில், எனது வருகை தொடர்பான சிறைச்சாலை பதிவுகள் மிகவும் தெளிவாகக் கிடைக்கக்கூடியதாக உள்ளன.
அந்த நேரத்தில், அவர் 2015 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட எமது கூட்டணியின் பங்காளியாக இருந்தார்” என்று அவர் கூறியுள்ளார்.
முழுமையான அறிக்கை:
2018/19 காலப்பகுதியில் டிஎம்விபி தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் சிறையில் இருந்தபோது நான் அவரைச் சென்று சந்தித்தது இரகசியமான ஒன்றல்ல. உண்மையில், எனது வருகை தொடர்பான சிறைச்சாலை பதிவுகள் மிகவும் தெளிவாகக் கிடைக்கக்கூடியதாக உள்ளன.
அந்த நேரத்தில், அவர் 2015 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட எமது கூட்டணியின் ஒரு தரப்பாக இருந்தார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் (CID) பிரான்ஸ் வரை சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது, இது இயற்கையாகவே அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து கேள்விகளை எழுப்புகிறது. பிள்ளையானுக்கான எனது வருகையை உறுதிப்படுத்துவதற்காகவே அதிகாரிகள் அவ்வளவு தூரம் பயணித்திருந்தால், அது பொதுப் பணத்தை வீணடிக்கும் ஒரு செயலாகும். எனக்குத் தெரிந்தவரை, பிள்ளையான் தற்போது ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கைது செய்து வைக்கப்படவில்லை.
அப்படியிருக்க, இந்த ஊடக நாடகங்களின் மூலம் அரசாங்கம் யாரைத்தான் திருப்திப்படுத்த முயற்சிக்கிறது?
தேசிய மக்கள் சக்தி (NPP) பல்வேறு காலகட்டங்களில் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து பல்வேறு கதைகளைப் பகிர்ந்துள்ளது. இந்தத் துயரத்தை அரசியல் எதிரிகளை இலக்கு வைப்பதற்காக அரசாங்கம் இப்போது பயன்படுத்த முயன்றால், அது இன்னமும் உண்மையான பதில்களையும் நீதியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.
நாங்கள் எந்தவொரு நியாயமான விசாரணைக்கும் முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம், மேலும் எந்தவொரு சந்தேகங்களையும் பகிரங்கமாகவும் வெளிப்படையான முறையிலும் தெளிவுபடுத்துவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முழுமையாக ஒத்துழைப்போம். அரசியல் நாடகங்கள் மற்றும் ஊடகத் தலைப்புச் செய்திகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் நாட்டின் மக்களுக்கு அர்த்தமுள்ள முடிவுகளை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.



