News

தோல்வியின் அறிகுறி – அடிபணிந்த அமெரிக்கா ( போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு பணிகளுக்காக ஈரானுக்கு பல நூறு பில்லியன் டாலர்களை வழங்குவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வரும் தகவல்கள் வெளியானது)

✍️ முகிந்தன்  துரைராஜசிங்கம்      –               சர்வதேச அரசியலிலும் சமூக ஊடகங்களிலும் இப்போது ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது.

ஒபாமா அதிபராக இருந்தபோது ஈரானுக்கு 1.7 பில்லியன் டாலர் பணத்தை அனுப்பியதை, பல ஆண்டுகளாக குடியரசுக் கட்சியினர் (Republicans) மிகக் கடுமையான அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய ஊழல் போல விமர்சித்து வந்தனர்.

ஆனால், இன்று டொனால்ட் ட்ரம்பின் குழுவினர், ஈரான் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு பணிகளுக்காக பல நூறு பில்லியன் டாலர்களை வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக வெளியாகும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈடாக, ஈரான் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர் வரை இழப்பீடு கோரியதாக பேச்சுவார்த்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, வாஷிங்டன் இந்தத் தொகையை “இழப்பீடு” (Reparations) என்று நேரடியாக அழைக்காமல், “சர்வதேச முதலீட்டு நிதி” (International Investment Fund) அல்லது “மறுசீரமைப்பு திட்டம்” (Reconstruction Program) என மாற்றுப் பெயரிட்டு வழங்க முயல்வதாகக் கூறப்படுகிறது.

பெயர்களை எப்படி மாற்றினாலும் யதார்த்தத்தை மறைக்க முடியாது.

ஒரு நாட்டின் மீது குண்டு வீசி, அதன் உள்கட்டமைப்பை அழித்து, வர்த்தகப் பாதைகளை சீர்குலைத்த பிறகு, அதை மீண்டும் கட்டியெழுப்ப பெரும் தொகையை அனுப்பினால் மக்கள் அதை இழப்பீடு என்றுதான் அழைப்பார்கள்.

இதில் இருக்கும் மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால், ஒபாமாவின் 1.7 பில்லியன் டாலர் சட்டப்பூர்வ தீர்வை தேசத்துரோகம் போல சித்தரித்த அதே அரசியல் இயக்கம், இன்று அதைவிட நூறு மடங்கு அதிகமான தொகையைப் பற்றி விவாதித்து வருகிறது.

மேலும், ட்ரம்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான மூலோபாய ஆலோசகர்களான Jared Kushner மற்றும் Steve Witkoff ஆகியோரின் பெயர்கள் இந்த பேச்சுவார்த்தைகளில் அடிபடுவது விவாதங்களை இன்னும் சூடாக்கியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையானது வழக்கமாக  5 படிமுறைகளை கொண்டது.

படி 1: ஒரு போரைத் தொடங்குவது.

படி 2: எளிதான வெற்றி கிடைக்கும் என உறுதியளிப்பது.

படி 3: ராணுவத்திற்காக பில்லியன் கணக்கில் செலவிடுவது.

படி 4: அந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை முழுமையாக சீர்குலைப்பது.

படி 5: இறுதியில், அதற்கு “அமைதி ஏற்படுத்துதல்” (Peacebuilding) என்று பெயரிட்டு, ரகசியமாக பல்லாயிரம் கோடி ஒப்பந்தங்களிற்காக பேச்சுவார்த்தை நடத்துவது.

அமெரிக்காவின் சாதாரண குடிமக்கள் கடன் சுமை, பணவீக்கம், மருத்துவச் செலவுகள் மற்றும் வீட்டுவசதி நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் வேளையில், வாஷிங்டன் வெளிநாட்டுப் போர்களுக்கும் புவிசார் அரசியல் பேரழிவுகளுக்கும் மட்டும் எப்படி தடையின்றி பணம் கிடைக்கின்றது என்ற கேள்வி  அமெரிக்க மக்களிடையே எழுந்துள்ளது.

உலக அரங்கில் இந்த செய்தி ஏன் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால், அமெரிக்கா இப்போரில் தீர்க்கமான வெற்றியைப் பெற்றிருந்தால், அவர்கள் ஏன் ஈரானுடன் ஹார்முஸ் ஜலசந்தி (Hormuz Concessions) சமரசங்கள் குறித்தோ அல்லது இவ்வளவு பெரிய மறுசீரமைப்பு நிதிகள் குறித்தோ பேச வேண்டும்?

ராணுவ பலத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று களமிறங்கும் ஒரு வல்லரசு, இறுதியில் தான் எதிர்பார்த்ததை விட பலவீனமான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

இந்த ஒட்டுமொத்த சூழலையும் ஆழமாக உற்றுநோக்கினால், வெளிப்படையாகச் சொல்லத் துணியாத ஒரு கசப்பான உண்மை புலப்படுகிறது: இப்போரில் அமெரிக்கா வியத்தகு முறையில் தோற்றுவிட்டது.

ராணுவ பலத்தாலும், அதிநவீன குண்டுவீச்சுகளாலும் ஈரானை முழுமையாக பணியவைத்துவிடலாம் என்று களமிறங்கிய வாஷிங்டனுக்கு, வியட்நாம் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களைப் போலவே இங்கும் ஒரு பெரும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

ஈரான் போன்ற ஒரு பிராந்திய சக்தியை ராணுவ ரீதியாக வீழ்த்த முடியாமல், இறுதியில் அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு பல நூறு பில்லியன் டாலர்களை “மறுசீரமைப்பு நிதி” என்ற பெயரில் இழப்பீடாக வழங்க அமெரிக்கா முன்வந்திருப்பதே அதன் பலவீனத்திற்கு மிகச்சிறந்த சான்றாகும்.

இந்த முடிவு பின்வரும் உண்மைகளை உலகிற்கு உரக்கச் சொல்கிறது:

ராணுவ ரீதியாக ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற முடியாததால்தான் வல்லரசு அந்தஸ்து சிதைந்த நிலையில் அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒபாமா கொடுத்த தொகையை விட நூறு மடங்கு அதிக தொகையை, அதுவும் “முதலீடு” என்ற போர்வையில் ஈரானுக்கு வழங்க முன்வருவது என்பது தங்களின் தோல்வியை மறைக்க வாஷிங்டன் போடும் ஒரு அவமானகரமான முகமூடி என்றால் மிகையாகாது.

ஹார்முஸ் ஜலசந்தியில் சமரசம் பேச முற்படுவதன் மூலம், அந்த பிராந்தியத்தின் மீதான முழுமையான கட்டுப்பாட்டை அமெரிக்கா இழந்துவிட்டது என்பது நிரூபணமாகியுள்ளது.

இறுதியாக, நவீன வரலாற்றில் மற்றுமொரு முறை அமெரிக்கா தனது தவறான வெளியுறவுக் கொள்கையால் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

சொந்த நாட்டு மக்கள் வறுமையிலும் கடன் சுமையிலும் தவிக்கும் போது, தேவையில்லாத போர்களைத் தொடங்கி, அதில் தோற்று, பின்னர் எதிரி நாட்டுக்கே பல்லாயிரங்கோடி பணத்தை அள்ளிக் கொடுக்கும் இந்த உத்தி, அமெரிக்கா ஒரு ‘மகா வல்லரசு’ என்ற பிம்பத்தை உலக அரங்கில் முற்றிலுமாக உடைத்தெறிந்துள்ளது.

இது அமெரிக்க சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கான தொடக்கப்புள்ளி என கருதலாம்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button