எதிர்பாராத அளவு அதிகமான சூரிய மின் உற்பத்தி இடம்பெற்றதால் தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சமநிலையற்ற தன்மையை தீர்க்க கொழும்பின் சில பகுதிகள் உள்ளிட்ட 100 பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது ; மின்சக்தி அமைச்சர்

தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சமநிலையற்ற தன்மை காரணமாக கொழும்பின் சில பகுதிகள் உட்பட சுமார் 100 பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத அளவு அதிகமான சூரிய சக்தி (சோலார்) உற்பத்தி காரணமாக, மின்சார விநியோகம் தேவையை விட அதிகரித்ததை அடுத்து, அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
அண்மைக்காலமாக நிலவிய மழைக்கால காலநிலை காரணமாக இன்று சூரிய சக்தி உற்பத்தி குறைவாக இருக்கும் என அதிகாரிகள் எதிர்பார்த்திருந்த போதிலும், பலத்த சூரிய ஒளி காரணமாக அதிகளவிலான கூரை மேல் சூரிய சக்தி தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அமைச்சரின் கூற்றுப்படி, இந்த பிரச்சனை முக்கியமாக மேல் மாகாணத்தை பாதித்துள்ளது, அங்கு களுத்துறை மற்றும் பாணந்துறை போன்ற பகுதிகள் உட்பட அதிக எண்ணிக்கையிலான கூரை மேல் சூரிய சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
பாரிய மின்தடையை ஏற்படும் அபாயத்தைத் தடுப்பதற்காக குறுகிய காலத்திற்கு இந்த மின்சாரத் தடைகள் ஏற்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
இன்று பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிக்குள் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய மின் கட்டமைப்புக்கு ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க உதவும் வகையில், கூரை மேல் சூரிய சக்தி பேனல் உரிமையாளர்களை இன்று பிற்பகல் 3.00 மணி வரை தங்களது அமைப்புகளை அணைக்குமாறு தேசிய மின் கட்டமைப்பு ஆபரேட்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.



