ஆம்… இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவை பைத்தியம் என்று நான் சொன்னது உண்மைதான் ; டொனால்ட் ட்ரம்ப் Confirmed
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொலைப்பேசி உரையாடலின்போது, அவரை பைத்தியம் எனக் கூறியது உண்மைதான் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் அமெரிக்கா சண்டை நிறுத்தம் செய்ததையடுத்து, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின்பேரில் வொஷிங்டனில் வைத்து இஸ்ரேலுக்கும், லெபனான் அரசுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் படைகள் தாக்குதலை தொடர்ந்த நிலையில், அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக ஈரான் திங்கள்கிழமை அறிவித்தது.
தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமரைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்ட ட்ரம்ப், அவரிடம் மிகக் கோபமாக பேசியதாகவும், அப்போது நெதன்யாகுவை ‘பைத்தியம்’ எனக் கூறியதாகவும் வொஷிங்டன் அதிகாரிகள் ஆக்சியோஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், நெதன்யாகுவை தான் பைத்தியம் எனக் கூறியது உண்மைதான் என்று ட்ரம்ப் உறுதி செய்துள்ளார்.
நியூ யார்க் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் பாட்காஸ்ட் நிகழ்வில், இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “உண்மைதான். இதைக் கோபத்தில் சொன்னேன் என்று கூறமுடியாது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில், தொடர்ந்து லெபனானுடன் அவர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததால், நான் சற்று கவலை அடைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நெதன்யாகுவுக்கு தொலைப்பேசியில் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்ததாக ஆக்சியோஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “நீங்கள் ஒரு பைத்தியம். நான் மட்டும் இல்லையென்றால், நீங்கள் இந்நேரம் சிறையில் இருந்திருப்பீர்கள். நான் உங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றேன். இப்போது அனைவரும் உங்களை வெறுக்கிறார்கள். இதன் காரணமாகவே, இஸ்ரேலையும் அனைவரையும் வெறுக்கிறார்கள்” என்று ட்ரம்ப் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



