News

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சில சலுகைகளை நீக்கும் சட்டங்களைத் தவிர, அனுர அரசாங்கம் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் எதையும் செய்யவில்லை ; UNP குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆகியோரின் நிர்வாகங்களின் முதல் 18 மாதங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு, அண்மையில் ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையின் துல்லியத்தன்மையை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.


நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், ஐக்கிய தேசியக் கட்சி, அந்த அறிக்கை சட்டங்களின் தாக்கம் மற்றும் முக்கியத்துவத்தை விட, அவற்றின் எண்ணிக்கையிலேயே கவனம் செலுத்தியுள்ளது என்று வாதிட்டது.

சிறிசேன நிர்வாகத்தின் முதல் 18 மாதங்களில் இயற்றப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டம் மற்றும் தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களை அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.


இந்த நடவடிக்கைகள் ஜனநாயக ஆட்சியை பலப்படுத்தியதுடன், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்ததுடன், தகவல் மற்றும் சுகாதார ஒழுங்குமுறைக்கான பொதுமக்களின் அணுகலை மேம்படுத்தின என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.


அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக பிரசாரம் செய்த போதிலும், அனுரகுமார திஸாநாயக்க நிர்வாகம் இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டங்களை அறிமுகப்படுத்தத் தவறிவிட்டது என்றும் அக்கட்சி மேலும் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சில சலுகைகளை நீக்கும் சட்டங்களைத் தவிர, அரசாங்கம் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் எதையும் வழங்கவில்லை என்றும் அது கூறியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 26 மாத பதவிக்காலத்தில், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், பொருளாதார உருமாற்றச் சட்டம் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டம் உட்பட 75 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி, அவரது சட்டமன்ற சாதனைகளையும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கம் பதவியேற்றது முதல் தேக்கமடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அக்கட்சி, நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் எண்ணிக்கையை மையமாகக் கொண்ட அறிக்கைகள், அதன் செயல்திறனைப் பற்றிய தவறான சித்திரத்தை சித்தரிக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button