News

இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு பைஸர் முஸ்தபாவினால் தனிநபர் மசோதா முன்மொழியப்பட்டது .

இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் தனிநபர் உறுப்பினர் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த “சமூக ஊடக குறைந்தபட்ச வயது மசோதா” (Social Media Minimum Age Bill), சிறுவர்கள் தீங்கு விளைவிக்கும் இணையவழி உள்ளடக்கங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஆளாவதைத் தடுப்பதையும், சமூக ஊடகங்கள் மற்றும் இணைய சேவை வழங்குநர்களுக்கான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த வரைவுச் சட்டத்தின் கீழ், இலங்கையில் இயங்கும் சமூக ஊடக சேவை வழங்குநர்கள், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அணுகுவதைத் தடுக்கவும், வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பயனர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் கோரப்படலாம். சிறுவர்கள் குறிப்பிட்ட இணையவழிச் சேவைகளில் செலவிடக்கூடிய நேரத்தையும், அவர்கள் அவற்றை அணுகக்கூடிய நாளின் நேரங்களையும் கட்டுப்படுத்துவதற்கும் இந்த மசோதா இடமளிக்கிறது.

இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் இந்தக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதற்கான விதிமுறைகளை அறிமுகப்படுத்த சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு இந்த முன்மொழிவு அதிகாரம் அளிக்கிறது.

மேலும், இந்தச் சட்டத்தின் விதிகளை நடைமுறைப்படுத்தவும், புகார்களைப் பெற்று விசாரணைகளை நடத்தவும், கண்காணிப்பதற்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஆணையாளர் ஒருவரை நியமிப்பதற்கும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இந்த வரைவின்படி, “சிறுவர்” என்பது 16 வயதுக்குட்பட்ட ஒருவரைக் குறிக்கும் அதேவேளை, “வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பயனர்” என்பது 16 வயதை அடையாத இலங்கைச் சிறுவரைக் குறிக்கிறது.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், இலங்கையிலுள்ள பயனர்களுக்குச் சேவைகளை வழங்கும் குறிப்பிட்ட சமூக ஊடக சேவை வழங்குநர்களுக்கு இது பொருந்தும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button