வசதிகள் போதாது… ஓட்டுவதற்கு வாகனங்கள் இல்லை.. அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் சரியாக இல்லை…

“வாரி மஹிம அபே உறுமய” (நீர்ப்பாசன பெருமை எமது மரபுரிமை) திட்டத்தின் கீழ், ஹொரவ்பொத்தானை குளத்தின் மதகுகளுடன் கூடிய வான் பகுதியை அமைத்தல் மற்றும் குளக்கட்டை புனரமைத்தல் ஆகிய பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 100.01 மில்லியன் ரூபாவாகும். இப்பிரதேச விவசாய மக்களின் விவசாய நீர் பிரச்சினைக்கு தீர்வாக இந்தத் திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தா பின்வருமாறு கருத்து தெரிவித்தார்:
“முன்பெல்லாம் இந்தப் பகுதியை உலர் வலயம் என்று அழைப்பார்கள். ஆனால் இங்கு இருக்கும் போது வீசும் காற்று குளிர்ச்சியாக இருக்கிறது. இதற்குக் காரணம் நீர்ப்பாசன முறைமையாகும். நீர்ப்பாசன முறைமை இல்லாவிட்டால் ரஜரட்ட (அனுராதபுரப் பகுதி) என்றொன்று இல்லை. எனவே, நீர்ப்பாசனத் திணைக்களத்தைப் போல மதிப்புமிக்க மற்றொரு திணைக்களம் நமக்கு இல்லை. இதற்காக மற்றவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக அனுராதபுரம், பொலன்னறுவை பகுதிகளில் குளங்கள் கட்டமைப்பு இல்லாவிட்டால் இன்றும் அது ஒரு பாலைவனமாகத்தான் இருக்கும். எமது குளங்களை பாதுகாத்துக் கொடுப்பதில் நீர்ப்பாசன திணைக்களம் பெரியதொரு சவாலை எதிர்கொண்டது. அதுதான் இந்த வரலாற்றில் எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலாகும்.
பொதுமக்கள் என்று கூறினால் அது ஒரு குழு. அரசாங்கம் செய்வது கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பது மட்டுமே. அவற்றுக்கான நிதியை அரசாங்கமே ஒதுக்குகிறது. இலங்கையின் ஒட்டுமொத்த நீர்ப்பாசன முறைமையையும் புனரமைக்க கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியை எமது ஜனாதிபதி ஒதுக்கியுள்ளார். எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, அரசையும் பொதுமக்களையும் இணைத்து, நாட்டில் முடங்கிக் கிடந்த அனைத்து கைத்தொழில்களையும் துறைகளையும் மீண்டும் இயங்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. நீர்ப்பாசன திணைக்களம் எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென்றால், ஒரு வருடத்தில் அவர்களால் வேலை செய்ய முடிந்தது மூன்று மாதங்கள் மட்டுமே. வேறு எந்த திணைக்களத்திற்கும் இத்தகைய பிரச்சினை இல்லை. அரசாங்கமும், நிர்வாகமும், மக்களும் சரியாக ஒன்றிணைந்தால் இதனை வெற்றிகரமாக செய்ய முடியும்.
பிரதேச சபை, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு, சமூக சக்தி குழுக்கள் வேலை செய்கிறதா என்பதை கிராம மக்கள் அவதானிக்க வேண்டும். நாம் எவ்வளவு பணம் ஒதுக்கினாலும் நிதி முற்போக்கு 60%, 40% என்ற அளவிலேயே உள்ளது. அரசாங்கத்திற்கு வசதிகள் போதாது. அரசாங்கத்திற்கு ஓட்டுவதற்கு வாகனங்கள் இல்லை. உத்தியோகபூர்வ இல்லங்கள் சரியாக இல்லை. இப்போது அரசாங்கம் மக்களுக்கு பெரிய அளவில் (Backhoe இயந்திரம் மூலம்) அள்ளி வழங்குகிறது. ஆனால் அரசாங்கத்திடம் சிறிய கரண்டியளவு கூட (தமக்காக வைத்துக் கொள்ள) இல்லை.
விவசாயிகளுக்கு ஒரு பொறுப்பு உள்ளது, தங்களை கொள்ளையடித்தவர்களுக்கு மீண்டும் இடமளிக்கக் கூடாது. நாம் நெல்லின் விலையை ஸ்திரப்படுத்துவோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. உங்களது குளத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். குளத்தில் வளரும் சில தாவரங்கள் சிறியதாக இருக்கும் போதே அவற்றை அகற்றுவதில்லை. முழு குளமும் மூடும் வரை காத்திருக்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் பணிகளில் பங்களிக்க வேண்டும். சில குளங்களுக்குச் செல்லும் பாதைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. தங்களது சொந்த எல்லையை கூட சுத்தம் செய்வதில்லை. அப்படியான மக்கள்தான் நாட்டின் அபிவிருத்திக்கு இருக்கிறார்கள். அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும். எனவே மக்களும் மாற வேண்டும். விவசாய அமைப்புகள் தங்களது விஷயங்களுக்காக இதைவிட அதிகமாக தலையிட வேண்டும். அரசாங்கத்தினால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. மக்களின் பங்களிப்பும் அவசியமாகும்.”



