News

வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களும், விவசாயிகளும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும் ; சீலரத்ன தேரர்

(க.சிவலிங்கமூர்த்தி)

தற்போதைய அரசாங்கத்தால் மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படாததுடன், எமது நாட்டு ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களை வரவழைத்து இலங்கையில் பணியமர்த்த அரசாங்கம் முயற்சிப்பதாக ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.



கொழும்பில் புதன்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் மக்களுக்குப் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதாகக் கூறினாலும், இதுவரை மக்களுக்கு எந்தவொரு உண்மையான நிவாரணமும் கிடைக்கவில்லை. ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வியலுவ பகுதியில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான வீடுகள் மற்றும் நிதிகள் கிடைக்காமல் இன்றும் வீதிகளிலேயே வாழ்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிதிகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

நாட்டின் விவசாய சமூகம் முற்றாக அழிக்கப்பட்டு, திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எல்லைப் பகுதிகளில் வாழும் விவசாயிகளும், பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் விவசாயிகளும் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளால் இன்று சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டுள்ளனர். பிரதேச அல்லது குல வேறுபாடுகளைப் பார்க்க மாட்டோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று விவசாயிகளைப் பிரித்தாளும் நிலைமையை உருவாக்கியுள்ளனர்.

அதேபோன்று, இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகள் வருவதாகக் கூறிக்கொண்டு, வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து இலங்கையில் பணியமர்த்த இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. 

கிராமப்புறங்களில் பிறந்து வளர்ந்த இந்த ஆட்சியாளர்கள், இன்று எமது நாட்டின் ஏழை மேசன் தொழிலாளர்களினதும் சாதாரண தொழிலாளர்களினதும் வாழ்வாதாரத்தை அழிக்கப் பார்க்கிறார்கள்.

எமது நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்காமல் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டுவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களும், விவசாயிகளும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button