3 கிலோ 50 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் அம்பாறையில் கைது

- பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம், உகண புறநகர் பகுதியில் சுமார் 3,050 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (21) அன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர் வசமிருந்து ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 39,000 ரூபாய் பணம், ஒரு மின்னணுத் தராசு, ஒரு கைபேசி மற்றும் இதர பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபரின் சொந்த வீடு உகண பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. எனினும், அவர் மாலிகாதென்ன பகுதியில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இந்தப் போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஒரு தீவிர போதைப்பொருள் அடிமை எனவும், இவருடைய தந்தை ஒரு ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக உகண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டப் பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் வழிகாட்டலில், ஊழல் ஒழிப்புப் பிரிவினர் உள்ளிட்ட விசேட பொலிஸ் குழுவினரே இச்சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இத்துடன், உகண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சுமித் குணவர்தன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன


