ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், மோடியின் BJP யிற்கும் இடையே உறவுகளை வலுப்படுத்த டெல்லியில் கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் சபை உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான ஜி. காசிலிங்கம், புதுடெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைமையகத்தில் பாஜக வெளிவிவகாரப் பிரிவின் பொறுப்பாளர் டாக்டர் விஜய் சவுதைவாலேவை சந்தித்தார்.
இச்சந்திப்பைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த காசிலிங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்தே இக்கலந்துரையாடல்கள் அமைந்திருந்ததாகக் கூறினார்.
“புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் டாக்டர் விஜய் சவுதைவாலேவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். SLPP மற்றும் BJP இடையே உறவுகளை வலுப்படுத்துவது குறித்து நாங்கள் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டோம்.
இந்த ஈடுபாட்டை மேலும் கட்டியெழுப்பி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை ஆழப்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாஜக தலைமையகத்திற்கான தனது விஜயத்தின் போது வழங்கப்பட்ட விருந்தோம்பலுக்காக பாஜக தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் (டாக்டர்) ஆசிர்வாதம் ஆச்சாரிக்கும் காசிலிங்கம் நன்றி தெரிவித்ததுடன், இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ச்சியான ஈடுபாடு இருக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.


